ஜோதிபாசுவுடன் பிரணாப் முகர்ஜி, சோம்நாத் சாட்டர்ஜி சந்திப்பு
கொல்கத்தா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஜோதிபாசுவை, மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோர் இன்று தனித்தனியாக சந்தித்தனர்.
இடதுசாரிகளின் ஆதரவு முடிவை ஆதரித்துள்ள ஜோதிபாசு, அரசைக் கவிழ்க்கும் முடிவுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மதவாத கட்சிகள் அரசைப் பிடித்து விடும் அபாயம் இருப்பதால் இந்த விஷயத்தில் இடதுசாரிகள் சற்று நிதானமாக நடப்பது நல்லது என்று அவர் கூறி வருகிறார்.
இந்தப் பின்னணியில் இன்று திடீரென ஜோதிபாசுவை பிரணாப் முகர்ஜி கொல்கத்தாவில்உள்ள பாசுவின் இல்லத்தில்சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ஜோதிபாசுவும், ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தும்தான் காங்கிரஸ் தலைமையில் மத்தியில் அரசு அமையவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும்,இடதுசாரிகளுக்கும் இடையே உறவு ஏற்படவும் முக்கிய காரணம்.
தற்போது எழுந்துள்ள அரசியல் சூழ்நிலை குறித்து ஜோதிபாசுவிடம் விளக்கினேன். எந்த சூழ்நிலையில் இடதுசாரிகளுடனான உறவு முறிந்தது என்றும் விளக்கினேன். அதற்கான காரணங்களையும் அவரிடம் எடுத்துக் கூறினேன்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும், இடதுசாரிகளுக்கும் இடையே கூட்டணி உருவானபோது, அரசை சிறப்பாக நடத்துமாறு என்னை ஜோதிபாசு கேட்டுக் கொண்டார். எனவே அவரிடம்தற்போதைய நிலவரம் குறித்து விளக்க வேண்டியது எனது கடமை. அந்தஅடிப்படையில்தான் நான் ஜோதிபாசுவை சந்தித்தேன்.
இந்திய அரசியலுக்கு மிகப் பெரிய பங்காற்றியவர் ஜோதி பாசு. அவர் மீது நானும், காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம் என்றார் பிரணாப் முகர்ஜி.
ஜோதி பாசுவை, பிரணாப் முகர்ஜி சந்தித்துள்ளது புதிய எதிர்பார்ப்புகளையும், பலகேள்விகளையும் எழுப்பியுள்ளது. ஜோதி பாசு மூலம், அரசுக்கு ஆதரவாக சில இடதுசாரி எம்.பிக்களைத் திருப்ப முடியுமா என்ற முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சோம்நாத்தும் சந்திப்பு:
பிரணாப் முகர்ஜி வந்து சென்ற சில நிமிடங்களில் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஜோதிபாசுவை வந்து சந்தித்துப் பேசினார். பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்து விட்டுச் சென்று விட்டார்.
--












Click it and Unblock the Notifications