சிகிச்சைக்காக சென்னை வந்த பஹ்ரைன் குழந்தை விமானத்தில் மரணம்
துபாய்: சென்னையில் உள்ள மருத்துவமனையில் இருதய அறுவைச் சிகிச்சைக்காக பஹ்ரைனிலிருந்து அழைத்து வரப்பட்ட பெண் குழந்தை ஓடும் விமானத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
பஹ்ரைனைச் சேர்ந்த முகம்மது யூசுப் என்பவரின் குழந்தை பாத்திமா தாரிக் யூசுப். ஒரு வயதான இக்குழந்தைக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது. சென்னையில் உள்ள பிரான்டியர் லைஃப் லைன் மருத்துவமனையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதையடுத்து தனது குழந்தை மற்றும் மனைவியுடன் யூசுப் சென்னைக்குக் கிளம்பினார். ஆனால் வெள்ளிக்கிழமை அதிகாலையில் விமானம் சென்னையை நெருங்கியபோது பாத்திமாக பரிதாபமாக உயிரிழந்தாள்.
சென்னையில் விமானம் தரையிறங்கியதும் பாத்திமாவின் மரணத்தை டாக்டர்கள் உறுதி செய்தனர்.இதையடுத்து உடலுடன் இன்று மீண்டும் பஹ்ரைன் திரும்புகின்றனர் யூசுப் தம்பதியினர்.
பிறந்தபோதே பாத்திமாவின் இருதயத்தில் கோளாறு இருந்தது. இதையடுத்து குழந்தையுடன் சென்னைக்கு வந்து டாக்டர்களைப் பார்த்தனர் யூசுப் தம்பதியினர். அப்போது அறுவைச் சிகிச்சை செய்யும் அளவுக்கு குழந்தை வளரவில்லை என்று கூறிய டாக்டர்கள், ஒரு வயதான பின்னர் மீண்டும் வருமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்தே பாத்திமாவுடன் மீண்டும் சென்னைக்குக் கிளம்பினார் யூசுப். ஆனால் விமானத்தில் பாத்திமாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சில நிமிடங்களில் பரிதாபமாக பாத்திமா உயிர் பிரிந்தது.












Click it and Unblock the Notifications