பட்டு உற்பத்தியில் தமிழகம் முதலிடம்
தூத்துக்குடி: பட்டு உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளது தமிழகம்.
நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பட்டு வளர்ச்சி துறை ஊழியர்கள் ஆலோசனைக் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த பட்டு வளர்ச்சி துறை ஆணையர் ஹர்மந்தர் சிங் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.8 கோடியில் 120 புதிய நூற்பாலைகள் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.4 கோடி அரசின் மானியமாகும். ஆகஸ்ட் மாதத்தில் கோபிச்செட்டிபாளையத்தில் தானியங்கி நூற்பாலை துவக்கப்பட்டது.
தானியங்கி நூற்பாலையை துவக்க ரூ.2 கோடி செலவாகும். மத்திய அரசு ரூ.50 லட்சமும், மாநில அரசு ரூ.15 லட்சமும் நிதி ஒதுக்குகிறது. இதனால் எதிர்காலத்தில் பட்டு உற்பத்தி அதிகரிக்கும். பட்டு உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது.
பட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 25 சதவிதமாகம். எனவேதான் தமிழகத்திற்கு அதிகளவில் மானியம் வழங்கப்படுகிறது.
பல்வேறு நலத்திடடங்கள் மூலம் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. தென்பகுதியில் பட்டு உற்பத்தியை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.