கும்பகோணம் பயங்கரம்-நாளை 4ம் ஆண்டு
கும்பகோணம்: கும்பகோணத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பலியானதன் 4ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.
கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல்கருகி பலியாயினர்.
இந்தக் குழந்தைகளின் நினைவாக ரூ. 60 லட்சம் செலவில் பழைய பாலக்கரை பகுதியில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு இப்போது முடிவுபெறும் நிலையில் உள்ளன.
இந்த மண்டபத்தில் ரூ. 29.5 லட்சம் செலவில் வெண்கலத்தில் நினைவு தூண் கட்டப்பட்டது. 4 பகுதிகள் கொண்ட இந்தத் தூணை பொருத்துவதற்காக நினைவு மண்டபத்தில் 4 பாகங்களாக கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டன.
ஆனால், வெண்கல நினைவு தூணை நேற்று மண்டபத்தில் பொருத்தி பார்த்தபோது அதற்கும் கான்கிரீட் தூணுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. இந்தப் பணியை செய்த காண்ட்ராக்டரின் அலட்சிமே இதற்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
கான்கிரீட் தூண்களை இடித்து அப்புறப்படுத்தினால்தான் வெண்கல தூணை நிறுவ முடியும் என்ற நிலை ஏற்பட்டதால், தூண்களை அதிகாரிகள் இடிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து அந்தத் தூண்கள் இடிக்கப்பட்டன.
நாளை குழந்தைகள் பலியானதன் 4ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்படும் நிலையில் இந்தத் தூண்கள் இடிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications