சென்னை: மதுரை நகைக் கடை ஊழியர்களை கடத்தி ரூ. 40 லட்சம் கொள்ளை
சென்னை: மதுரையிலிருந்து நகை வாங்க சென்னை வந்த நகைக் கடை ஊழியர்கள் 3 பேரை நடுரோட்டில் ஆட்டோவிலிருந்து கடத்திச் சென்று ரூ. 40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மதுரை தெற்கு ஆவணி மூலவீதியில் தமிழ்நாடு ஜூவல்லரி நகைக்கடை உள்ளது.
கடைக்கு தேவையான நகைகள் வாங்குவதற்காக அதன் ஊழியர்கள் சிவமுருகேசன், பாலசுப்பிரமணி, இளங்கோ ஆகியோர் ரூ. 40 லட்சம் பணத்துடன் ரயிலில் சென்னை வந்தனர்.
சென்னை மண்ணடியில் ஒரு விடுதியில் தங்கினர். தங்கம் விலை அதிகமாக இருந்ததால் நகையை வாங்க வேண்டாம் என கடையின் உரிமையாளர் பொன்னம்பலம் கூறிவிட்டார்.
இதையடுத்து நேற்றிரவு 3 பைகளில் பிரித்து வைக்கப்பட்ட பணத்துடன் மீண்டும் மதுரை புறப்பட்டனர். 9 மணியளவில் விடுதியில் இருந்து கிளம்பி ஆட்டோவில் கோயம்பேடு பஸ் நிலையம் சென்றனர்.
அமைந்தகரை சிக்னல் அருகே ஆட்டோ சென்றபோது 2 மோட்டார் சைக்கிள்கள் வந்த 4 பேர் ஆட்டோவை வழி மறித்தனர். நகைக்கடை ஊழியர்களையும், ஆட்டோ டிரைவரையும் சரமாரியாக தாக்கிய அவர்கள் ஆட்டோவில் ஏறினர்.
கொள்ளையர்களில் ஒருவன் ஆட்டோ டிரைவரின் கழுத்தில் கத்தியை வைத்து ஆட்டோவை தொடர்ந்து ஓட்டச் சொன்னான்.
சிறிது தூரத்தில் ஒரு வேன் தயாராக நின்றது. அதில் 3 ஊழியர்களையும் ஏறுமாறு அக் கும்பல் மிரட்டியது. அவர்கள் மறுக்கவே மீண்டும் தாக்கியது. இதில் சிவமுருகேசனுக்கு கையில் கத்திக் குத்து விழுந்தது.
பாலசுப்பிரமணி, இளங்கோவுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. மூவரையும் பணப் பைகளுடன் வேனில் தூக்கிப் போட்டு கொண்ட அக் கும்பல் ஆட்டோ டிரைவரை விட்டுவிட்டது.
வேனுக்குள் வைத்து மூவரையும் அடித்து உதைத்து பணப் பைகளை பறித்த அக் கும்பல் நள்ளிரவில் மாதவரம் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் 3 பேரையும் கீழே தள்ளி விட்டுவிட்டு பணத்துடன் தப்பிவிட்டது.
இதையடுத்து மூவரும் மாதவரம் காவல் நிலையத்துக்கு விரைந்து சென்று புகார் தந்தனர். மூவரையும் போலீசார் ஸ்டேன்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சம்பவம் குறித்து மூவரும் கூறுகையில்,
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்ததால் ஏகாம்பரேஸ்வர் கோவிலில் முதலாளி காத்திருக்கச் சொன்னார். பின்னர் நகை வாங்க வேண்டாம், பணத்துடன் திரும்பி வாருங்கள் என்று கூறினார்.
இதனால் ஆட்டோவில் கோயம்பேடு கிளம்பினோம். அமைந்தகரை சிக்னலில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் ஆட்டோவை இருபுறமும் இடித்தனர். அவர்கள் போதையில் இருப்பதாக நினைத்தோம்.
ஆனால், திடீரென வழிமறித்து உள்ளே ஏறி எங்களையும் டிரைவரையும் தாக்கினர். 3 பேரிடமும் தனித்தனியாக இருந்த பணப் பைகளை பறிக்க முயன்றனர்.
இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். யாரும் என்ன என்று கேட்கக் கூட முன் வரவில்லை.
3 பேரையும் அடித்து வேனில் தூக்கிப் போட்டனர். நாங்கள் சத்தம் போட முடியாதபடி கழுத்தை நெரித்து பிடித்துக் கொண்டனர். கீழே படுக்க வைத்து எங்கள் மீது உட்கார்ந்து கொண்டனர்.
வழிநெடுக தாக்கிய அவர்கள் நள்ளிரவில் தான் பைகளை பறித்துக் கொண்டு எங்களை ஒரு மைதானத்தில் இறக்கி விட்டனர்.
இருட்டில் எங்கிருக்கிறோம் என்று கூட தெரியாமல் காவல் நிலையம் இருக்கும் இடமும் தெரியாமல் நடந்து திரிந்தோம். ரத்தம் சொட்டச் சொட்ட வருவதை பார்த்து யாரும் உதவிக்கு வரவில்லை.
ஒரு வழியாக மாதவரம் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தோம் என்றனர்.












Click it and Unblock the Notifications