கெளடாவுடன் சோனியா தூதர் சந்திப்பு
டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புவதற்காக மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவு கோரி அக் கட்சியின் தலைவர் தேவே கெளடாவுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தூதர் அகமத் படேல் பேச்சு நடத்தினார்.
டெல்லியில் இந்த சந்திப்பு நடந்தது. கெளடாவிடம் 3 எம்.பிக்கள் உள்ளனர். இதில் கேரளத்தைச் சேர்ந்த அதிருப்தி எம்பியான வீரேந்திரகுமார் காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அறிவித்துவிட்டார். அவர் கெளடாவின் பேச்சை எப்போதுமே கேட்டதில்லை.
இதனால் மிச்சமிருப்பது 2 எம்பிக்களே. இதில் ஒருவர் கெளடா. இன்னொருவர் சிவண்ணா. நம்பிக்கை வாக்கில் வெல்ல ஒவ்வொரு எம்பியும் முக்கியம் என்பதால் எந்த சிறிய கட்சியையும் விடாமல் காங்கிரஸ் ஆதரவு கேட்டு வருகிறது.
இந்த வகையில் 2 எம்பிக்கள் கொண்ட கெளடாவிடம் ஆதரவு கோரியுள்ளது. ஆனால், அவர் கர்நாடக பாஜக விஐபிக்களான பெல்லாரியைச் சேர்ந்த சுரங்க அதிபர்களான ரெட்டி சகோதரர்களை ஒடுக்க காங்கிரஸ் முன் வந்தால் ஆதரவு தருவதாக நிபந்தனை போட்டார்.
பெல்லாரி சுரங்கங்களை நாட்டுடமையாக்கினால் ஆதரவளிப்பதாக கெளடா கூறி வருகிறார்.
இந் நிலையில் சோனியா காந்தியின் அரசியல் தூதரான அகமத் படேல் தேவே கெளடாவை அரை மணி நேரம் சந்தித்து சமசர பேச்சு நடத்தினார். ஆனால், அப்போதும் கெளடா ஏதும் பிடி கொடுத்து பேசவில்லை என்று தெரிகிறது.
தனது முடிவை 18ம் தேதி அறிவிப்பதாக கெளடா கூறிவிட்டார்.












Click it and Unblock the Notifications