சென்னையிலும் உண்மை கண்டறியும் சோதனை கருவி!
சென்னை: குற்றவாளிகளிடம் உண்மையைக் கண்டறிய நார்கோ அனலிசிஸ் மற்றும் பிரைன் மேப்பிங் வசதிகளை ரூ.1.25 கோடி செலவில் சென்னையிலேயே ஏற்படுத்தவுள்ளது தமிழக அரசு.
இதுகுறித்து தடய அறிவியல் துறை இயக்குனர் விஜயகுமார் கூறியதாவது:
தமிழக தடய அறிவியல் துறைக்கு ரூ. 9 கோடி செலவில் 4 மாடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் இது திறக்கப்படும்.
தடய அறிவியல் துறையை நவீனப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குற்றவாளிகளிடம் உண்மையை கண்டறிவதற்காக தற்போது உண்மை கண்டறியும் கம்ப்யூட்டர் கருவி (லை டிடெக்டர்) மட்டுமே தமிழக தடய அறிவியல் துறையில் உள்ளது.
மேலும், பெங்களூர் தடயஅறிவியல் துறையில் உள்ளதுபோல, தமிழக தடய அறிவியல் துறைக்கும் நவீன வசதிகள் செய்து கொடுக்க அரசு ரூ.1.25 கோடி ஒதுக்கியுள்ளது.
குற்றவாளிகளிடம் உண்மையை கண்டறிய பெங்களூர் தடய அறிவியல் துறையில் நார்கோ அனலிசிஸ் என்ற நவீன முறையும், பிரைன் மேப்பிங் என்ற நவீன முறையும் நடைமுறையில் உள்ளன.
இவற்றின் மூலம் உண்மையை மறைக்கும் குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி துல்லியமாக உண்மையை வெளிகொணர முடியும். இந்த நவீன முறைகள் தமிழக தடய அறிவியல் துறையிலும் விரைவில் கொண்டு வரப்பட உள்ளன.
அரசு ஒதுக்கிய ரூ.1.25 கோடியில் இருந்து நார்கோ அனலிசிஸ் திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 45 லட்சமும், பிரைன் மேப்பிங் சிஸ்டத்துக்கு ரூ. 80 லட்சமும் செலவிடப்படும்.
நார்கோ அனலிசிஸ், பிரைன் மேப்பிங் சிஸ்டத்தை செயல்படுத்துவதற்காக 10 விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும். அதன்பிறகு தமிழக தடய அறிவியல் துறை பெங்களூர் தடய அறிவியல் துறைக்கு இணையாக தலைசிறந்து விளங்கும் என்றார் விஜயகுமார்.












Click it and Unblock the Notifications