நளினி விடுதலைக்கு எதிரான சுவாமி மனு தள்ளுபடி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தான் ஏற்கனவே 17 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டதால் தன்னை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அரசின் ஆலோசனைக் குழு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தன்னை விடுவிக்க வேண்டும் என நளினி தனது மனுவில் கூறியுள்ளார்.
ஆனால், நளினியை முன் கூட்டியே விடுவிக்கக் கூடாது, இந்த வழக்கில் என்னையும் எதிர் மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அவரது மனுவுக்கு நளினி சார்பில் வழக்கறிஞர் துரைராஜ் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தன்னை விடுதலை செய்வதற்கு சுப்பிரமணியம் சுவாமியின் கருத்தை கேட்க வேண்டியதில்லை எனறு கூறியிருந்தார் நளினி.
நீதிபதி வி.எஸ். நாகமுத்து முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அளித்த தீர்ப்பில்,
இந்த வழக்கில் தன்னையும் சேர்க்க வேண்டும் என்பதற்கான சரியான காரணங்களை சுப்பிரமணியம் சுவாமி கூறவில்லை. இதனால் எதிர் மனுதாரராக அவரை சேர்க்க முடியாது.
இது நளினிக்கும், அரசுக்கும் இடையேயான வழக்கு. இதில் சுப்பிரமணியம் சுவாமி இல்லாமலேயே திறமையாக விசாரிக்க முடியும்.
இந்த வழக்கில் சுவாமி எழுப்பியுள்ள சந்தேகங்களுக்கு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் போதிய விளக்கங்கள் இருப்பதால், சுப்பிரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார். எனினும் வழக்கின் முக்கியத்துவம் கருதி சுவாமியும் இதில் வாதாட வந்தால் அனுமதிக்கலாம்.
தேவைப்பட்டால் அவர் கருத்தை இந்த நீதிமன்றம் கேட்டுக் கொள்ளும். ஆகவே, இந்த வழக்கில் ஒரு வாதியாக சுப்பிரமணியம் சுவாமியை சேர்க்க அனுமதிக்க முடியாது என்று கூறி சுவாமியின் மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி.












Click it and Unblock the Notifications