சம்பளம் கோரி ஆசிரியர் உள்ளிருப்பு போராட்டம்!
கரூர்: கரூர் மாவட்டம் , மாயனூர் அரசு ஆரம்ப பள்ளியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வரும் கார்த்திகேயன் தனக்கு உரிய சம்பளத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து தொடக்க கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
கார்த்திகேயனுக்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய சம்பளம் ஜூலை மாதம் ஆகியும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அவர் கிருஷ்ணராயபுரம் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் கேட்டபோது சரியான பதில் சொல்லாமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் தனக்கு சம்பளம் தராத கல்வி நிர்வாகத்தை கண்டித்து கிருஷ்ணராயபுரம் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் கார்த்திகேயன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரது போராட்டம் சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றது.
இந்த நிலையில் அவருக்கு உரிய சம்பளம் உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் சமாதானம் செய்த பின்பு அவர் தனது போராட்டத்தைக் கைவிட்டார்.