பெரியாறு அணை உறுதியாக உள்ளது: தமிழக அரசு
டெல்லி: 142 அடிக்கு மேல் தண்ணீரை தேக்கி வைக்கும் அளவுக்கு முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்புடன் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு முக்கிய நீர்ப்பாசன ஆதாரமாக இருப்பது முல்லைப் பெரியாறு அணை. கேரள எல்லையில் உள்ள இந்த அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது.
அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழகம் நீண்ட காலமாக கோரி வருகிறது. அணை பலவீனமாக இருப்பதாகவும், எனவே நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்றும் கேரளா கூறி வந்தது.
இந்நிலையில் தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்ற உச்சநீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி அளித்தது. போராடி கிடைத்த இந்த உத்தரவை அமல்படுத்த விடாமல் கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக அதன் கீழ்ப் பகுதியில் புதிய அணை கட்ட வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்தது.
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் காவிரி தொழில்நுட்ப பிரிவின் துணைத் தலைவர் ஆர்.சுப்பிரமணியம் நேற்று பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில் சுப்ரமணியம் கூறியிருப்பதாவது:
கடந்த 27.02.2006 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, முல்லைப்பெரியாறு அணையை மேலும் பலப்படுத்த தமிழக அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிபுணர் கமிட்டியின் பரிந்துரைப்படி, அணையை பலப்படுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு முடித்தது. அணையில் அதிகபட்ச உண்மையான கொள்ளளவான 142 அடிக்கும் அதிகமாக தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
தமிழக அரசு கடந்த 2006-ல் நியமித்த நிபுணர் கமிட்டி, அணையையும், அதன் அடித்தளத்தை முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. அணைப் பகுதியில் காணப்படும் நீர்க்கசிவு, அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்தான் இருக்கிறது.
தற்போதுள்ள அணையை வலுப்படுத்த வேண்டும் என்று மத்திய நீர்வள துறை முடிவு செய்தது. அதன்பிறகே தற்போது இருக்கும் அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா தெரிவித்தது. எனவே இது காலம் கடந்த சிந்தனை ஆகும்.
மேலும் தற்போதுள்ள முல்லைப்பெரியாறு அணையின் கீழ் பகுதியில் மிகப்பெரிய பரப்பிலான வனப்பகுதியும், ஒரு வன விலங்கு புகலிடமும் உள்ளது. இந்த சூழ்நிலையில் அங்கு தற்போதுள்ள அணையின் கீழ் பகுதியில் புதிய அணை கட்டுவது இயலாத காரியம் என்று அந்த மனுவில் தமிழக அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications