முதல்வருடன் மீனவர்கள் பேச்சு-ஸ்டிரைக் வாபஸ்
சென்னை: முதல்வர் கருணாநிதியுடன் சென்னையில் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலைக் கண்டித்து கடந்த ஜூன் 3ம் தேதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.
இதனால் ராமேஸ்வரம் தீவில் மீன்பிடிதொழில்முற்றிலும் ஸ்தம்பித்தது. இதையடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் இறுதியாக, இன்று முதல்வர் கருணாநிதியை, மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேசினர். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மீனவர் சங்கங்கள் வேலைநிறுத்த்ததைக் கைவிடுவதாக அறிவித்துள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் என்.ஜே. போஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலை தடுத்து நிறுத்துவது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வலியுறுத்தியிருப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
சார்க் மாநாட்டுக்காக கொழும்புசெல்லும்போது இதுகுறித்து இலங்கை அதிபருடன் பேசித் தீர்வு காணுமாறு பிரதமரை வலியுறுத்தியிருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
கைதான மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
மரணமடைந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பரிவுத் தொகையை ரூ. 1 லட்சம் என்பதிலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் உறுதிமொழிகளை ஏற்று வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கை விடுகிறோம். 19ம் தேதி முதல் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications