சிறையில் குருவை பார்க்க பாமகவினருக்கு தடை
அரியலூர்: வன்னியர் சங்க மாநில தலைவர் காடு வெட்டி குருவை பார்க்க பாமக கட்சியினர் மற்றும் உறவினர்களுக்கு சிறை நிர்வாகம் தடை விதித்துள்ளது.
வன்னியர் சங்க மாநில தலைவர் காடு வெட்டி குரு பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக கூறி தமிழக அரசு அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளது.
இந்த நிலையில் குருவை, அவரது வழக்கறிஞர்கள் தவிர உறவினர்களோ, கட்சிக்காரர்களோ பார்க்க சிறை நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதையடுத்து தனது மனைவி உள்ளிட்ட 8 உறவினர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இவர்கள் தன்னைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என குரு சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் அந்த பட்டியலில் பார்க்க வேண்டியவர்களின் முழு முகவரி இல்லை என்பதால் அதை சிறை நிர்வாகம் நிராகரித்து விட்டது. எனவே முழு முகவரியுடன் பட்டியில் கொடுத்தால் மட்டுமே அவர்களால் குருவை சந்திக்க இயலும்.
இந்தப் பட்டியலை அரியலூர் போலீசாருக்கு அனுப்பி அவர்கள், அதனை பரிசீலனை செய்து, பார்க்க அனுமதிக்கலாம் என்று கூறிய பின்னர்தானன் அவர்கள் குருவை சந்திக்க அனுமதி வழங்கப்படும். இருப்பினும் இந்த அனுமதி கிடைக்க கால அவகாசம் எதுவும் இல்லையாம்.
அனுமதி கிடைத்தாலும் பட்டியலில் உள்ளவர்கள் மாதம் இரு முறை மட்டும் பார்க்க அனுமதிக்கப்படுவர் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவரை அவரது வக்கீல் மட்டுமே குருவைப் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications