பாக். எல்லைக்குள் அமெரிக்கா தாக்குதல்-11 வீரர்கள் பலி

பாகிஸ்தானுக்குள் உள்ள பகுதியில் அமெரிக்க படைகள் நடத்தியுள்ள இந்த தாக்குதலால் பாகிஸ்தான் அரசு கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளது.
வசிரிஸ்தான் பகுதி, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ளது. தலிபான்கள் மற்றும் அல் கொய்தா அமைப்பினரின் முழுக் கட்டுப்பாட்டில் இப்பகுதி உள்ளது. இங்குள்ள தீவிரவாதிகளை எதிர்த்துப் போராட முடியாமல் பாகிஸ்தான் படைகள் திணறிக் கொண்டுள்ளன.
இந்த நிலையில், வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் இன்று விமானத் தாக்குதலை நடத்தின. மொத்தம் 12 குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 11 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை அமெரிக்கா நியாயப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் புஷ் கூறுகையில், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் சில தீவிரவாதிகள் தீவிரமாக இயங்கிக் கொண்டுள்ளனர். இது அமெரிக்காவுக்கு நல்லதல்ல. ஆப்கானிஸ்தானுக்கும் நல்லதல்ல. நாளை பாகிஸ்தானுக்கும் இது இடையூறாக அமையும் என்றார் புஷ்.
அமெரிக்காவின் இந்த திடீர் தாக்குதலால் பாகிஸ்தான் அரசு அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளது. ஆனால் இந்த நடவடிக்கை சரியானதே, நியாயமானதே என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி விட்டதாக நேற்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பாரக் ஓபாமா பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கை அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications