குமாரசாமிக்கு அமைச்சர் பதவி வேண்டும்: காங்.கிடம் கெளடா பேரம்!
டெல்லி: மகன் குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி தர வேண்டும். பெல்லாரி மாவட்டத்தில் பாஜகவினர் பிடியில் உள்ள குவாரிகளை தேசியமயமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை காங்கிரஸ் முன் வைத்துள்ளார் 3 எம்.பிக்களை வைத்துள்ள தேவெ கெளடா.
அரசுக்கு ஆதரவான வாக்குகளை திரட்ட காங்கிரஸ் கட்சி படு மும்முரமாக முயன்று வருகிறது. இதில் ஒரு முயற்சியாக முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவெ கெளடாவிடம், தொலைபேசி மூலம் பிரதமர் மன்மோகன் சிங் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து தேவெ கெளடா செய்தியாளர்களிடம் பேசுகையில்,பிரதமர் என்னுடன் ஆலோசனை நடத்தியது உண்மைதான். நாளை நேரில் வந்து சந்திப்பதாக அவரிடம் தெரிவித்தேன் என்றார்.
ஆனால் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பல நிபந்தனைகளை கெளடா விதித்துள்ளாராம். மகனும், முன்னாள் முதல்வருமான குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி (கேபினட் அந்தஸ்தில்) அளிக்க வேண்டும்.
பெல்லாரி மாவட்டத்தில் பாஜகவினர் கையில் உள்ள குவாரிகள் அனைத்தையும் தேசியமயமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை கெளடா விதித்துள்ளாராம்.
நாளை பிரதமரை கெளடா நேரில் சந்திக்கும்போது இதுகுறித்து இருவரும் விரிவாக விவாதிப்பார்கள் என்று தெரிகிறது.
சோரனுக்கு காங். வலை - பாஜக 'சூப்பர்' வலை!
இதற்கிடையே, 5 எம்.பிக்களை கொண்டுள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான சிபு சோரனை இழுக்க காங்கிரஸும், பாஜகவும் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளன.
பல கொலை வழக்குகளில் சிக்கி மீண்டுள்ள சோரன், அமைச்சர் பதவி தர வேண்டும் என காங்கிரஸை பல மாதங்களாக கோரி வந்தார்.ஆனால் அதை காங்கிரஸ் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது. ஆனால்தற்போது அப்படி இருக்க முடியாதே.
இதனால், சிபு சோரனுக்கு மத்திய கேபினட் அமைச்சர் பதவி தருவதாக சோரனுக்கு காங்கிரஸ் தூது விட்டுள்ளது.
ஆனால் பாஜகவோ, தடாலடியாக, ஜார்க்கண்ட் மாநில முதல்வராக்குகிறோம், பாஜக அணிக்கு ஆதரவு தாருங்கள் என சூப்பர் வலையை வீசியுள்ளதாம்.
இதில் எந்த வலையில் சிபு சிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.