ஜம்முவில் தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் - 42 பேர் காயம்
ஜம்மு: ஜம்முவில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் துணை கமான்டன்ட் உள்பட 42 பேர் படுகாயம் அடைந்தனர்.
காஷ்மீர் மாநிலத்தின் ராம்பன் மாவட்டம் பனிஹாஸ் டவுன் பகுதியில் அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கான பாதுகாப்பு பணியில் மத்திய ரிசர்வ் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் மதியம் தொழுகைக்காக அங்குள்ள ஜாமியா மசூதியில் முஸ்லீம்கள் கூடியிருந்தனர். அப்போது 1.05 மணியளவில் தீவிரவாதிகள் திடீரென்று கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ரிசர்வ் போலீஸ் துணை கமான்டன்ட் உள்பட 42 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
உடனே போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். காயமடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து ராம்பன் மாவட்ட டிஎஸ்பி தலீப் கூறுகையில், காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் உள்ளூர்வாசிகள்தான். அமர்நாத் யாத்ரீகர்கள் இதில் காயமடையவில்லை. தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் யாத்திரை பாதிக்கப்படாமல் தொடர்ந்து நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
--












Click it and Unblock the Notifications