90வது பிறந்த நாளைக் கொண்டாடினார் நெல்சன் மண்டேலா
டர்பன்: தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நேற்று தனது 90வது பிறந்த நாளை கொண்டாடினர். அவருக்கு லட்சக்கணக்கான மக்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இனப் பிரச்னையை எதிர்த்து போராடியதற்காக 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் நெல்சன் மண்டேலா. கடந்த 1990ல் விடுதலையானார். 1994ல் நடந்த தேர்தலில் போட்டியிட்டு தென் ஆப்ரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்தான் முதல் கருப்பர் இனஅதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
1999ம் ஆண்டு பதவிக் காலம் முடிந்ததை தொடர்ந்து, ஆப்ரிக்காவின் அவலநிலையாக இருக்கும் ஏழ்மை, கல்லாமை, எய்ட்ஸ் நோய்க்கு எதிராக போராடி வருகிறார் மண்டேலா.
உலக மக்களை ஈர்த்த தலைவரான மண்டேலா நேற்று தனது 90வது பிறந்தநாளை கொண்டாடினார். கேப் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ள தனது சொந்த கிராமமான கியூனுவில் குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடினார். அந்த கிராமமே விழாக் கோலம் பூண்டிருந்தது. அவருக்கு ஏராளமாக மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அப்போது மண்டேலா கூறுகையில், "ஓய்வு பெற்ற இந்த மனிதனுக்காக மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஆனால் நெல்சன் மண்டேலா அறக்கட்டளை, நெல்சன் மண்டேலா குழந்தைகள் நிதி மற்றும் மண்டேலா-ரோட்ஸ் அறக்கட்டளைகள் மூலம் எனது பணி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது என்பதை மக்கள் நினைவு கூரவேண்டும்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications