30 ஆண்டுகளில் நம்பி்க்கை வாக்கு கோரும் 6வது பிரதமர்

கடந்த 1979ல் இருந்து இதுவரை 8 பிரதமர்கள் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இதில் 3 பேர் மட்டுமே மெஜாரிட்டையை நிரூபித்து ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டனர்.
மீதி சிலர் போதிய வாக்குகள் கிடைக்காமல் தோற்றுப் போயினர். சிலர் வாக்கெடுப்புக்கு முன் கடைசி நிமிடத்தில் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்.
அந்த வரிசையில் ஆட்சி நிலைக்குமா நிலைக்காதா என்ற மில்லியன் டாலர் கேள்விகளோடு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு இன்று மனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.
1990ம் ஆண்டில் கூட்டணி ஆட்சிகள் வந்த பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
இந்தியாவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்குள்ளான முதல் பிரதமர் செளத்ரி சரண்சிங். கடந்த 1979ம் ஆண்டு காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சி அமைத்த அவரை அந்தக் கட்சியே கவிழ்த்தது. ஆனால் வாக்கெடுப்புக்கு முன்னதாகவே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இப்போது அவரது மகனான அஜீத் சிங் அதற்கு பழிக்குப் பழியாய், காங்கிரசுக்கு ஆதரவு தர மறுத்து மாயாவதியின் கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார்.
1990ல் மண்டல் கமிஷன இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதால் கடுப்பான பாஜக தனது ஆதரவை திரும்ப பெற்றதால் மைனாரிட்டி அரசானது பிரதமர் வி.பி.சிங்கின் ஆட்சி. அவரது ஆட்சியை கவிழ்க்க பாஜவுடன் கைகோர்த்தது காங்கிரஸ்.
அதைத் தொடர்ந்து 1996ம் ஆண்டு மே மாதம், பிரதமர் வாஜ்பாய் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு மனு செய்தார். ஆனால், மெஜாரிட்டி இல்லை என்பது உறுதியானதால் வாக்கெடுப்பை சந்திக்காமல் பதவியை ராஜினாமா செய்தார்.
அடுத்து திடீரென பிரதமரான தேவெ கெளடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு அதே ஆண்டு ஜூன் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. இதில் மெஜாரிட்டியை நிரூபித்து ஆட்சியை காப்பாற்றிக் கொண்டார் கெளடா.
ஆனால், அடுத்த ஆண்டே காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் பெற, கெளடா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இவரும் இப்போது அதற்கு பழி தீர்க்க மாயாவதியுடன் இணைந்துவிட்டார்.
கெளடாவைத் தொடர்ந்து ஐக்கிய முன்னணி சார்பில் பிரதமரானார் இந்தர் குமார் குஜ்ரால். 1997 மே மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்.
பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சி பீடம் ஏறியது. மீண்டும் பிரதமரானார் வாஜ்பாய். அப்போது நம்பிக்கை கோரிய வாக்கெடுப்பில் வாஜ்பாய் வெற்றி பெற்று ஆட்சியை தொடர்ந்தார்.
ஆனால் அடுத்த 13 மாதங்களில் அதிமுக தனது ஆதரவை திரும்ப பெற்றது. இதனால் 1999ம் ஆண்டு மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உள்ளானார் வாஜ்பாய்.
ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில், சேடப்பட்டி முத்தையா கவிழ்த்துவிட்டதால், அவரது ஆட்சி கவிழ்ந்தது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உள்ளாகி 2 முறை ஆட்சியை இழந்த ஒரே பிரதமர் வாஜ்பாய் தான்.
இப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையில் பிரதமராக உள்ள மன்மோகன்சிங் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியுள்ளார். அவரது ஆட்சியின் தலைவிதி நாளை நடக்க உள்ள வாக்கெடுப்பின் முடிவில் தெரியும்.












Click it and Unblock the Notifications