திமுக உண்ணாவிரதம்: நிரந்தர தீர்வுக்கான முதல்படி - ஸ்டாலின்
மதுரை: திமுக நடத்திய உண்ணாவிரத போராட்டம், மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான முதல் படி என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு 2 தமிழக மீனவர்கள் பரிதாபமாக பலியானார்கள். இலங்கை கடற்படையை கண்டித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக உண்ணாவிரத போராட்டம் நடத்தியது.
வெற்றிகரமான இந்த போராட்டம், மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான முதல்படியாகும். தமிழக மீனவர்கள் தாக்குதல் குறித்து இந்தியாவுக்கான இலங்கை தூதர் ஜெயசிங்கேவிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்ததாக அறிந்தேன்.
கச்சத்தீவை திரும்ப பெறுவதிலும், மீனவர் நலன் காப்பதிலும் மேற்கொண்ட போராட்டத்துக்கு கிடைத்த நியாயமான வெற்றியாகும் என்றார்.
வலை வீசத் தொடங்கிய மீனவர்கள்:
இதற்கிடையே, 17 நாள் தொடர் வேலை நிறுத்தத்திற்குப் பின்னப் மீண்டும் இன்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது தொழிலை தொடங்கினர்.
17 நாட்கள் நடந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் 20, 000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. துறை ரீதியாக ரூ. 24 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அன்னிய செலவணியில் ரூ.4.80 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மீனவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதையடுத்து இன்று முதல் மீண்டும் கடலுக்குள் சென்றனர். இன்று காலை 746 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.