குமரியில் கடல் உள் வாங்கியதால் படகு போக்குவரத்து நிறுத்தம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் தொடர்ந்து 2வது நாளாக கடல் உள் வாங்கியதால் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் தவிப்புக்குள்ளாகினர்.
சுனாமி தாக்குதலுக்குப் பிறகு தமிழக கடல் பகுதிகளில் அடிக்கடி கடல் கொந்தளிப்பும், உள் வாங்குதலும் சகஜமாகி விட்டது. அதேபோல அடிக்கடி கடல் நீர் ஊருக்குள் நுழைவதும் வழக்கமாகியுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குமரி கடலில் கடல் நீர் உள் வாங்கியதால் படகுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலில் உள்ள பாறையில் அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சென்று பார்க்க பூம்புகார் கப்பல் நிறுவனம், படகு போக்குவரத்ைத நடத்தி வருகிறது.காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த படகு சவாரி இருக்கும்.
நேற்று முன்தினம் கடல் பிற்பகல் வாக்கில் உள்வாங்கியதால் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் நிலைமை சரியானதும் படகு சவாரி தொடங்கியது.
இந்த நிலையில் நேற்றும் கடல் உள் வாங்கியது. நேற்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் படகு போக்குவரத்து தொடங்கியது. ஆனால் 8.30 மணி அளவில் திடீரென்று கடல் நீர் உள்வாங்கியது. இதனால் பாறை பகுதியில் நீர் மட்டம் குறைந்தது. இதனால் படகை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அப்போது ஏற்கனவே படகில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்ற சுமார் 100 சுற்றுலாப்பயணிகள் கரைக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். கடல் மட்டம் சீரானதைத்தொடர்ந்து சுமார் 2 மணி நேர இடைவெளிக்குப் பிறகு படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. பின்னர் விவேகானந்தர் மண்டபத்தில் தவித்தவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.