அத்வானி 10 கோடி தந்தார் என்றால் நம்புவீர்களா?-அமர்சி்ங்
டெல்லி: பாஜக எம்பிக்கள் உள்பட நான் யாருக்கும் பணம் தரவில்லை.. யாரும் பணம் தர முயற்சிக்கவும் இல்லை என சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், நான் பணம் தந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர் பாஜக எம்பிக்கள். மேலும் சோனியாவின் அரசியல் செயலாளர் அகமத் படேலின் அவர்கள் பெயரையும் இழுத்துள்ளனர்.
நான் தான் பணம் தந்தேன் என்பதை அவர்கள் நிரூபிக்கட்டும். இதை ஒரு தொலைக்காட்சி ரகசியமாக படம் பிடித்துள்ளதாக சொல்கிறார்கள். அதைக் காட்ட வேண்டியது தானே.
இதோ நானும் ஒரு 10 கோடி கரன்சி கட்டுகளை எடுத்துக் கொண்டு வந்து இதை அத்வானி தந்தார் என்று சொல்கிறேன். அதை ஏற்பீர்களா?
முதலில் இவர்களது விலை ரூ. 40 கோடி, ரூ. 50 கோடி என்றார்கள். இப்போது எப்படி அவர்களது விலை திடீரென ரூ. 1 கோடியாகிப் போனது. பாஜக எம்பிக்களின் விலை ஏன் இப்படி இறங்கிப் போனது?
அந்தப் பணக் கட்டுகள் எந்த வங்கியிலிருந்து வந்தது.. அதில் உள்ள கைரேகைகளை சோதனை செய்யட்டும்.
நான் இந்த விஷயத்தில் எந்த விசாரணைக்கும் தயார். புரளியைக் கிளப்புவதில் பாஜகவுக்கு ஈடு இணை யாராவது உண்டா என்றார் அமர்சிங்.
விசாரணைக்கு தயார்-அகமத் படேல்:
சோனியாவின் அரசியல் செயலாளர் அகமத் படேல் கூறுகையில்,
என் வாழ்வில் முதல் முறையாக எனது பெயரை ஒரு மட்டமான குற்றச்சாட்டில் இழுத்துவிட்டுள்ளனர். நான் யாருடனும் பணம் தொடர்பாக பேசவில்லை.
நான் தவறு செய்திருந்தாக நம்பினால் என் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கலாம். நான் அதற்குத் தயார் என்றார்.












Click it and Unblock the Notifications