மருத்துவமனை.. சிறப்பு விமானத்தில் வந்த பாஜக எம்பிக்கள்
மும்பை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக எம்பிக்கள் இருவர் விஷேச விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
பெரும் பரபரப்புக்கு மத்தியில் மன்மோகன் சிங் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் பிரதான எதிர்க்கட்சியான பாஜக மத்திய அரசை எதிர்த்து ஓட்டு போடும்படி தனது எம்பிக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இக்கட்சியின் உத்திர பிரதேச மாநில எம்பியான ஹரீஷ் சந்திர சவான் விபத்தில் படுகாயம் அடைந்த நாசிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குஜராத் மாநில எம்பியான மகேஷ் கனோடியாவுக்கு கடந்த 14ம் தேதிதான் மும்பையில் உள்ள ஆசியன் ஹார்ட் இன்ஸ்டியூட்டில் இருதய அறுவை சிகிச்சை நடந்தது.
இதனால் இவர்கள் இருவரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. ஆனால் வாக்கெடுப்பில் மத்திய அரசை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று பாஜக வரிந்து கட்டி செயல்பட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் இவர்கள் இருவரையும் டெல்லி அழைத்து வர பாஜக முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து ஹரீஷ் சந்திர சவான் நேற்று இரவு 8.30 மணி அளவில் நாசிக் அருகில் உள்ள ஓஜ்ஹார் விமான நிலையத்துக்கு ஒரு ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார்.
அவருடன் அவரது மனைவி கலாவதி சவானும், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரசாந்த் பட்டீலும் உடன் வந்தனர்.
மற்றொரு எம்பியான மகேஷ் கனோடியா இன்று காலையில் விஷேச விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்படுகிறார்.
பாஜக அதிருப்தி எம்பி அரசுக்கு ஆதரவு:
இதற்கிடையே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அதிருப்தி எம்பி சோமபாய் படேல். இவர் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
இந் நிலையில் அரசைக் கவிழ்ப்பதற்காக அவர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை பாஜக வாபஸ் பெற்று வாக்களிக்க அனுமதி அளி்த்தது.
ஆனால், அவரோ காங்கிரஸ் கூட்டணி அரசை ஆதரித்து வாக்களிக்கப் போவதாக அறிவித்து பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
அவையில் மனைவியுடன் ஜெயில் எம்பி கிசுகிசு:
டெல்லி திகார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் ராஷ்ட்ரீய ஜனதாதள எம்பி பப்பு யாதவ். இவர் டெல்லி உயர்நீதிமன்ற அனுமதியுடன் லோக்சபா கூட்டத்தில் நேற்று பங்கேற்றார்.
அவரது மனைவி ரஞ்சிதா ரஞ்சன், ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியின் எம்பியாக உள்ளார்.
லோக்சபாவில் இருவருக்கும் வெவ்வேறு மூலையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மனைவியை பிரிந்து நீண்ட நாள் சிறையில் இருந்து வரும் பப்பு யாதவுக்கு, லோக்சபாவில் மனைவியை பார்த்ததும் பிரிந்திருக்க முடியவில்லை.
இதையடுத்து, கடைசி வரிசையில் இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டனர். அவையில் அனல் பரக்க விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, கணவன்-மனைவி இருவரும் தங்கள் சொந்த விஷயங்களை பேசிக் கொண்டிருந்தனர்.
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் ஏக்கங்கள்....












Click it and Unblock the Notifications