மாயாவதி வளர்ச்சியை தடுக்க அரசுக்கு பாஜக மறைமுக ஆதரவு?
டெல்லி: டெல்லி அரசியல் வட்டாரத்தில் நேற்று திடீர்திருப்பம் ஏற்பட்டது. அது, பாஜக கூட்டணியைச் சேர்ந்த கணிசமான எம்.பிக்கள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிப்பார்கள் என்ற தகவல்தான்.
இப்போதைய நிலையில் அரசு கவிழ்ந்தால் அது திடீரென வி்ஸ்ரூபம் எடுத்திருக்கும் மாயாவதிக்கும், இடதுசாரிகளுக்கும்தான் லாபம் என்பதால் அதைத் தடுக்க பாஜக மறைமுகமாக அரசு கவிழாமல் தடுக்கப் பார்ப்பதாக பரபரப்பு எழுந்துள்ளது.
அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை என்பார்கள். அந்த பழமொழிக்கு மறுபடியும் வேலை வந்துள்ளதோ என்று நினைக்க வைக்கும் வகையில் நேற்று திடீர் திருப்பங்கள் டெல்லியில் அரங்கேறின.
அது பாஜக மூத்த தலைவர்கள் சிலர் கூடி எடுத்துள்ள முடிவால். லோக்சபாவில் விவாதம் சூடாக நடந்து கொண்டிருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி அறையில் பாஜகதலைவர்கள் ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, ஜஸ்வந்த் சிங் உள்ளிட்டோர் கூடி முக்கிய ஆலோசனையை மேற்கொண்டனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுதோற்று, கவிழ்ந்தால் அது நிச்சயம் பாஜகவுக்கு எந்த பலனையும் தராது.மாறாக அத்தனை பெருமையும் மாயாவதிக்கும், 3வது அணிக்கும், பிரகாஷ் காரத்துக்கும்தான் போகும். அவர்கள் பெரும் பலம் பெறுவார்கள். நமக்கு இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும்.
மாறாக, அரசு வெற்றி பெற்று விட்டால் முலாயம் சிங் யாதவுக்கு பலம் கிடைத்து விடும். இதுவும் பாஜகவுக்கு உகந்ததல்ல. ஆனால் முலாயம் சிங்குடன் ஒப்பிடுகையில் மாயாவதி தலைமையிலான அணிதான் மிகவும் ஆபத்தான எதிரி. எனவே மாயாவதி மற்றும் அவரது அணியினர் பலவீனமடைவதுதான் நமக்கு நல்லது என்று ஆலோசிக்கப்பட்டது.
இதன் விளைவாக பாஜகவிலிருந்து சிலரும், கூட்டணிக் கட்சிகலான அகாலிதளம், பிஜூ ஜனாதளம் ஆகியவற்றிலிருந்து சிலரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது என ரகசிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது.
இப்படிச் செய்தால் மன்மோகன் சிங் அரசு கவிழாமல் பிழைக்கும், மாயாவதி அன் கோவின் பலமும் மட்டுப்படுத்தப்படும் என்பது பாஜகவின் எண்ணம் என்று கூறுகிறது.
இந்த எண்ணத்தை உறுதிப்படுத்தும் வகையில்தான் நேற்று லோக்சபாவில் பேசிய அத்வானியின் பேச்சும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அத்வானி பேசுகையில், ஒரு கருத்தை திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். இந்த அரசு கவிழ வேண்டும், சீர்குலைய வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. மாறாக தோற்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம் என்று அவர் திரும்பத் திரும்பக் கூறினார்.
மாயாவதியை மனதில் வைத்துதான் அத்வானி இப்படிப் பேசியிருப்பதாக கருதப்படுகிறது. இதை காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மஹபூபா லோக்சபாவிலேயே தெரிவித்து அத்வானியை நெளிய வைத்தார். அத்வானியின் பேச்சிலேயே அரசு வெற்றி பெற்று விடும், கவிழாது என்பது உறுதியாகி விட்டதாக மெஹபூபா கூறியபோது காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி வரவேற்றனர். பாஜக தரப்போ தர்மசங்கடமாக காணப்பட்டது.
டெல்லி அரசியல் வட்டாரத்தில் திடீரென எழுந்துள்ள இந்த புதிய சூழ்நிலையால், 3வது அணித் தலைவர்கள் பீதியடைந்துள்ளனர்.
இருப்பினும் இந்தத் தகவலை பாஜக மறுத்துள்ளது. திட்டமிட்டபடி அனைத்து உறுப்பினர்களும் நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று பாஜக கூறுகிறது.
இந்தப் புதிய சூழ்நிலையால் அரசு எப்படியும் தப்பி விடும் என்ற நம்பிக்கை காங்கிரஸுக்கு வந்துள்ளது.
அரசியலாச்சே, எதுவும் நடக்கலாம்.












Click it and Unblock the Notifications