சங்கரராமன் கொலை வழக்கு: தமிழக வக்கீல் ஆஜராக தடை
டெல்லி: சங்கரராமன் கொலை வழக்கில் புதுவையைச் சேர்ந்த வக்கீலை அரசுத் தரப்பில் நியமிக்க வேண்டும். தமிழக அரசு வக்கீல் இதில் ஆஜராகத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக முந்தைய அதிமுக அரசு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்டோரைக் கைது செய்தது.
பின்னர் நீதிமன்றம் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தது. இந்த வழக்கு முதலில் காஞ்சி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.
ஆனால் வழக்கை வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும் என்ற ஜெயேந்திரர் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை புதுச்சேரி நீதி மன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கில், அரசு தரப்பில் தமிழக அரசின் வழக்கறிஞர் ஆஜராக எதிர்ப்பு தெரிவித்து ஜெயேந்திரர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு விடுமுறைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இன்று இது தொடர்பான உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி,தமிழக அரசு வக்கீல் இந்த வழக்கில் ஆஜராகத் தேவையில்லை. மாறாக, புதுவையைச் சேர்ந்த வக்கீலையே புதுவை அரசு தனது சார்பில் வாதாட நியமிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வழக்கு விசாரணையை தொடரலாம் எனவும் அது உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் காரணமாக வழக்கு விசாரணை நடத்தப்படாமல் தொடர்ந்து இழுபறி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பின் மூலம் சங்கரராமன் கொலை வழக்கு இனி துரிதமாக விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications