பெரியாறு: ஆய்வுக்கு ஆணையம் அமைத்தது சுப்ரீம் கோர்ட்
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை வழக்கில் தமிழக, கேரள அரசுகள் தாக்கல் செய்துள்ள ஆதாரங்களை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்து உள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்துமாறு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை ஏற்க மறுத்த கேரள அரசு, அந்த உத்தரவை அமல்படுத்தாமல் இருக்க வகை செய்யும் சிறப்பு சட்டத்தை கேரள சட்டசபையில் நிறைவேற்றியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அணை விவகாரம் தொடர்பாக இரு மாநில அரசுகளும் சுமூகமாக பேசி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, இரு மாநில அரசுகளும் ஆலோசனை மேற்கொண்டு கடந்த மார்ச் 11-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கைகள் தாக்கல் செய்தன.
கேரள அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 2006-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்த போது முல்லைப் பெரியாறு அணையில் இருந்த ஸ்திரத்தன்மை தற்போது இல்லை என்றும், இதனால் அணையையொட்டி அமைந்துள்ள 5 மாவட்டங்களில் வசிக்கும் 30 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இதேபோல், தமிழக அரசும் தனது தரப்பு நியாயத்தை வலியுறுத்தி 47 ஆவணங்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.
முல்லைப் பெரியாறு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், அணை கண்காணிப்பு உடன்படிக்கைகள் போன்றவற்றை தமிழக அரசு சமர்ப்பித்து, கேரள அரசு புதிய அணை கட்டினால், கேரள மாநில எல்லைக்கு அருகே அமைந்துள்ள தமிழக கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்படும் என்றும், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை கேரள அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரி இருந்தது.
இரு மாநில அரசுகளின் கோரிக்கைகளையும் பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு, அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு எத்தகைய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று தமிழக, கேரள அரசுகள் விரும்புகின்றன என்பதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தமிழக அரசு ஏற்கனவே தனது தரப்பு நியாயத்தை விளக்கி பதில் மனு தாக்கல் செய்த நிலையில், கேரள மாநில அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலத்தை ஆதாரமாக கொண்டு ஓடும் நதிகள் மற்றும் ஏரிகளில் இருந்து தேக்கி வைக்கப்படும் நீரை உள்ளடக்கியது என்றும், மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதியாக இருந்தால் மட்டுமே நீரை பகிர்ந்து கொள்வது பற்றி பரிசீலிக்க இயலும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள ஒப்பந்த ஆதாரங்களுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என்பதால், இந்த பிரச்சினையில் தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்கும் முன்பு கேரள மாநில மக்களின் நலன்களை கருதி கேரள அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கேரள அரசின் கூடுதல் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து இரு மாநில அரசுகளும் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் சி.கே.தாக்கர், அரிஜித் பசாயத், டி.கே.ஜெயின் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரணை நடத்தியது.
அதன் பின்னர், இரு மாநில அரசுகளும் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் மற்றும் உண்மை நிலையை ஆராய ஓய்வு பெற்ற ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி அனில்தேவ் சிங் தலைமையில் ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த ஆணையம் தனது விசாரணை அறிக்கையை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டார்கள். வழக்கும் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications