அதிமுக எம்எல்ஏவுக்கு துப்பாக்கி உரிமம் வழங்க தடை
சென்னை: அதிமுக எம்.எல்.ஏ வி.பி. கலைராஜனுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமத்தை வழங்குமாறு சென்னை காவல்துறை ஆணையருக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை தி.நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வி.பி. கலைராஜன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிவால்வர் வைத்துக்கொள்ள உரிமம் கோரி மாநகர காவல்துறை ஆணையருக்கு விண்ணப்பித்தார். ஆனால் உரிமம் வழங்கப்படவில்லை.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை அவர் அணுகினார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி பால் வசந்தகுமார் உரிமம் வழங்குமாறு மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டு ஜூன் 3ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஆணையர் சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், வி.பி. கலைராஜன்,3 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications