நம்பிக்கை வாக்கில் வென்ற 7வது பிரதமர்!
டெல்லி: இதுவரை நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்ைக வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற 7வது பிரதமராக மன்மோகன் சிங் உருவெடுத்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளில் இதுவரை மொத்தம் 10 முறை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானங்கள் ஓட்டெடுப்புக்கு வந்துள்ளன.
அதில், 6 முறை அரசுகள் வெற்றி பெற்றுள்ளன. வாஜ்பாய் உள்ளிட்ட 2 பிரதமர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
முதன் முதலில் 1979-ம் ஆண்டு, ஜனதா கட்சி உடைந்தபோது, அப்போதைய பிரதமர் சரண்சிங் நம்பிக்கை ஓட்டு கோரினார். அவருக்கு போதிய எம்.பி.க்களின் ஆதரவு இல்லை. எனவே அவர், நம்பிக்கை வாக்கு கோராமல் பதவி விலகினார்.
1989-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய பிரதமர் வி.பி. சிங், நம்பிக்கை ஓட்டு தாக்கல் செய்து வெற்றி பெற்றார். ஆனால் அடுத்த ஆண்டிலேயே அவர் பதவி விலகி விட்டார்.
அதற்கு காரணம், பாஜகவுடன் காங்கிரஸ் கை கோர்த்துக் கொண்டதுதான். புனிதமற்ற இந்த கூட்டணியே வேண்டாம் என்று கூறி வி.பி.சிங் பதவி விலகினார்.
வி.பி. சிங்கை தொடர்ந்து பிரதமரானார் சந்திரசேகர். 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் நம்பிக்கை ஓட்டில் வெற்றி பெற்றார். ஆனால் 5 மாதங்களிலேயே அவரது அரசு கவிழ காரணமாக இருந்தது காங்கிரஸ். அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தி, அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்ததால் சந்திரசேகர் பதவி விலக நேரிட்டது.
பின்னர் 1993-ம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் நரசிம்ம ராவ் நம்பிக்கை ஓட்டில் வெற்றி பெற்று, தனது அரசின் 5 ஆண்டு கால பணியை
நிறைவு செய்தார்.
1996-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிரதமராக இருந்த தேவே கெளடா நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றார். ஆனால் அவரது ஆட்சிக்கு அளித்த ஆதரவை, காங்கிரஸ் வாபஸ் பெற்றதால், அவரது அரசு 1997-ம் ஆண்டு ஏப்ரலில் கவிழ்ந்தது.
கெளடாவை தொடர்ந்து வந்த பிரதமர் ஐ.கே. குஜ்ரால், 1997-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த வாக்கெடுப்பில் வெற்றி கண்டார். ஆனால் அதே ஆண்டு நவம்பரில், மெஜாரிட்டியை இழந்ததால், பதவி விலகி விட்டார்.
1996-ம் ஆண்டு பிரதமராக இருந்த வாஜ்பாய், பாராளுமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்படும் முன்பே, சபையிலேயே தனது ராஜினாமாவை அறிவித்தார். ஆனால் 1998-ம் ஆண்டு மே மாதம் நடந்த ஓட்டெடுப்பில் அவர் வெற்றி பெற்றார்.
ஆனால் அடுத்த ஆண்டில், அ.தி.மு.க. ஆதரவை வாபஸ்
பெற்றுக்கொண்டதால், ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய்
தோல்வி அடைந்து பதவி விலகினார்.
அதன் பின்னர் தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று அதில் பிரதமர் மன்மோகன் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
மன்மோகன் சிங் மகிழ்ச்சி:
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு
கூட்டணியின் தலைவர் சோனியா காந்திக்கும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும் மற்றும் எம்.பி.க்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
சில எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட பிரச்சினையில், சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னர் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்து தனது வெற்றியை அவரிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications