ஒகேனக்கல் திட்டம்: சட்டவிரோதமானது அல்ல-கருணாநிதி
சென்னை: ஒகேனக்கல் குடிநீர் திட்டம் சட்ட விரோதமானது அல்ல என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ரூ.1,334 கோடி மதிப்பிலான ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை சமீபத்தில் தமிழக அரசு அடிக்கல் நாட்டியது. அப்போது திட்டத்தை எதிர்த்து கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. தமிழக அரசு பேருந்துகள், பெங்களூர் தமிழ்ச் சங்கம் ஆகியவை தாக்கப்பட்டன. பதிலுக்கு முதல் முறையாக தமிழகத்திலும் கர்நாடகத்தை எதிர்த்து வன்முறை வெடித்தது.
இரு மாநிலங்களிலும் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் தேர்ந்தெடுக்கப்படும் அரசு வரும் வரை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
கர்நாடகத்தில் தேர்தல் முடிந்து பாஜக அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து இத் திட்டம் திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
இந்நிலையில் கர்நாடக மாநில சட்டசபை நேற்றுமுன் தினம் கூடியது. அப்போது ஒகேனக்கல் திட்டத்தை எதிர்த்து அரசு என்ன செய்தது என்று எதிர்கட்சியான காங்கிரஸ் பிரச்னையை கிளப்பியது.
அதற்கு பதிலளித்த முதல்வர் எடியூரப்பா, ஒகேனக்கல் திட்டம் சட்டத்துக்கு புறம்பானது என்று தெரிவித்தார். மேலும் இத்திட்டத்தை தடுப்பது குறித்து விவாதிக்க பெங்களூரில் முதல்வர் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. இதனால் மீண்டும் ஒகேனக்கல் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
எடியூரப்பாவின் இந்த கருத்துக்கு தமிழக முதல்வர் கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார். திட்டம் சட்டத்துக்கு புறம்பானது அல்ல என்று அவர் தெரிவித்தார்.
நிருபர்களிடம் கருணாநிதி கூறுகையில், ஒகேனக்கல் குடிநீர் திட்டப் பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அட்டவணைபடுத்தப்பட்டபடி அதற்கான பணிகள் தொடரும். குடிநீர் திட்டம் கண்டிப்பாக சட்ட விரோதமானது அல்ல என்று கருணாநிதி கூறியுள்ளார்.