திண்டிவனம் அருகே இடிதாக்கி 5 பேர் பலி
விழுப்புரம்: திண்டிவனம் அருகே நேற்று பெய்த மழைக்கு மரம் ஒதுங்கியபோது இடிதாக்கி 5 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
திண்டிவனம் அருகே சலவாதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமநாதன்(50)-இந்திராணி(45) தம்பதி.
இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் அறுவடை நடந்து வருகிறது. நேற்று இந்த பணியில் 12 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது பலத்த காற்றும், இடியுடன் கூடிய மழையும் பெய்தது.
இதையடுத்து இவர்கள் அனைவரும் அருகில் உள்ள மரத்தடியில் ஒதுங்கினர். அப்போது மரத்தின் மீது திடீரென இடி இறங்கியது. இதில் இந்திராணி(45), புருஷோத்தமன் (27), ராஜூ (25), தேவதாஸ் (35), விநாயகம் (32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதனர். இதுகுறித்து ரோஷணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமதாஸ் நேரில் அஞ்சலி:
இடிதாக்கி உயிரிழந்தவர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முன்னால் கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம், வருவாய் கோட்டாட்சியர் கேப்ரியல், மதிமுக மாவட்ட செயலர் மாசிலாமணி, முன்னாள் எம்எல்ஏ சேதுராமன் ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.