10 கட்சி மெகா கூட்டணி-ஜெயலலிதா இணைவாரா?

ஆனால், தானே பிரதமராகும் கனவில் இருக்கும் (ஒரு காலத்தில் இருந்த) ஜெயலலிதா, மாயாவதியை பிரதமராக்கும் நோக்கத்துடனான இந்தக் கூட்டணியில் சேருவாரா என்று தெரியவில்லை.
ஏற்கனவே மூன்றாவது அணியிலிருந்து ஜெயலலிதா வெளியேறக் காரணம் அதன் தலைவராக சந்திரபாபு நாயுடு முயன்றது தான்.
மேலும் கடந்த மக்களவைத் தேர்தலில் 20 இடங்களில் வென்றால் நான் தான் அடுத்த பிரதமர் என்று கூறி கட்சியினரை படு வேகமாக களத்தில் இறக்கிவிட்டவர் ஜெயலலிதா. ஆனால், மிஞ்சியது முட்டை தான்.
இந் நிலையில் மாயாவதி தலைமையில் புதிய கூட்டணி திடீர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தக் கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்ட் பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட், ராஷ்ட்ரீய லோக் தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, இந்திய தேசிய லோக்தள், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா உள்ளிட்ட 10 கட்சிகள் உள்ளன.
இவை மெகா கூட்டணியாக செயல்பட திட்டமிட்டுள்ளன.
இன்த அணிக்கு தலைவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்றாலும் மாயாவதி தான் தலைவர் என்பதே உண்மை.
இந்த அணியில் இணையுமாறு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடப்படுமா என்று கேட்டதற்கு பதிலளித்த இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி.பரதன், அதுபற்றி விவாதிக்கப்படவில்லை. படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இதற்கிடையே ஜெயலலிதாவை இந்த அணிக்குள் இழுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக உள்ளது. விரைவில் ஜெயலலிதாவுடன் அந்தக் கட்சி பேச்சு நடத்தும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications