சென்னையில் மீண்டும் ஒரு மர்மக் கொலை-சைக்கோ பீதி அதிகரிப்பு
சென்னை: கடந்தசில நாட்களாக அமைதியாக இருந்து வந்த சென்னையில் இன்று அதிகாலை இளைஞர் ஒருவர் தலையில் கல்லைப் போட்டு கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் மீண்டும் சைக்கோ பீதி அதிகரித்துள்ளது.
சென்னையின் முக்கியப் பகுதிகளான வட பழனி, அசோக் நகர், மாம்பலம், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து மர்மக் கொலைகள் நடந்துவருகின்றன. இதுவரை 8 பேர் கொல்லப்பட்டனர். வாட்ச்மேன்களாக அதிகம் கொல்லப்பட்டிருப்பதால் இது ஏதோ ஒரு சைக்கோ மனிதரின் செயலாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
கொலையாளி இதுவரை சிக்காததால் மக்கள் பெரும் கவலையுடனும், பீதியுடனும் உள்ளனர். இரவு ரோந்தை போலீஸார் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களும் கையில் கம்புகளுடன் ரோந்து சுற்றி வருகின்றனர்.
இந்த தீவிர கண்காணிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக புதுக் கொலை எதுவும் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் விருகம்பாக்கம், சின்மயா நகரில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் பிணம் கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபர் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் யார், எதற்காக கொல்லப்பட்டார், யார் கொன்றது என்பது தெரியவில்லை.
இந்தக் கொலையால் மீண்டும் சைக்கோ நபர் பீதி அதிகரித்துள்ளது. போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்












Click it and Unblock the Notifications