பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கருணாநிதி கவனம்-ஜெ
சென்னை: வரும் காலத்திலாவது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தாமல், தனது கட்சிக்கு மத்திய அரசில் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, கச்சத் தீவை மீட்கவும், தமிழ்நாட்டில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறையை போக்கவும் முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதல்வர் கருணாநிதி மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கையும், தற்போதைய அரசியல் சூழ்நிலையையும் பயன்படுத்தி மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
அதற்கு அவர் எனது ஆட்சிக் காலத்தில் நான் என்ன செய்தேன் என்று எதிர் வினா எழுப்பியிருக்கிறார். 1895 மற்றும் 1930ம் ஆண்டு வரையிலான படங்களின்படி கச்சத்தீவு இந்தியாவிற்கே சொந்தம்.
1974ம் ஆண்டு இந்தத் தீவை இலங்கையிடம் ஒப்படைக்கும் முன், மத்திய அரசு தமிழக அரசிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
தமிழக மீனவ மக்களின் மீது கருணாநிதிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருக்குமானால், மத்திய அரசுக்கு இது போன்ற ஓர் எண்ணம் இருக்கிறது என்று தெரிந்த உடனேயே, தனது திட்டவட்டமான எதிர்ப்பை தெரிவித்திருக்க வேண்டும்.
அதையும் மீறி மத்திய அரசு கச்சத் தீவை தாரைவார்க்க முற்பட்டபோது, அதை எதிர்த்து ஒரு மிகப் பெரிய போராட்டத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி நிச்சயமாக நடத்தியிருக்க வேண்டும்.
அடுத்தபடியாக, தற்போதைய மின் பற்றாக்குறைக்குக் காரணம் அதிமுக ஆட்சி தான் என்று பேசியிருக்கிறார். அதிமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டதால் தான் தொழில்துறை, தகவல் தொழில் நுட்பத்துறை ஆகியவை பெருமளவிற்கு வளர்ச்சி அடைந்தன.
எனது 2001-2006 ஆட்சிக் காலத்தில் மட்டும் கூடுதலாக 2,047 மெகாவாட் அளவிற்கு புதிதாக மின் உற்பத்தி நிறுவு திறன் சேர்க்கப்பட்டது.
எனது ஆட்சிக் காலத்தில், 31.3.2006 அன்றைய நிலவரப்படி, தமிழ் நாட்டின் மின் உற்பத்தி 10,011 மெகாவாட் ஆகும். ஆனால், தேவைப்பட்ட மின்சாரத்தின் அளவோ 8,775 மெகாவாட் என்ற நிலையில் தான் அப்போது இருந்தது. அதாவது, உபரியாக 1,236 மெகாவாட் மின்சாரம் கையிருப்பில் இருந்தது.
இந்த உபரி மின்சாரத்தை கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற அண்டை மாநிலங்களுக்கு வினியோகம் செய்தோம். இதனால் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைத்தது.
திமுக அரசு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது. இதை நான் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டிய போது, மின்சாரப் பற்றாக்குறை கிடையாது என்று சொன்ன ஆற்காடு வீராசாமி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தொழிற்சாலைகளுக்கு மின்சார விடுமுறை அளித்தார்.
தற்போது சென்னையில் வசிப்பவர்களுக்கு தினமும் ஒரு மணி நேர மின்சார வெட்டும், மற்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு தினமும் இரண்டு மணி நேர மின்சார வெட்டும், கிராமங்களில் வசிப்பவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்களுக்கு நான்கு மணி நேர மின்சார வெட்டும் 21.7.2008 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் வெட்டு நேரத்தையும் சேர்த்து, மொத்தம் 12 மணி நேர மின் வெட்டு தமிழ்நாட்டில் அமலில் உள்ளது.
உண்மை நிலவரத்தை ஒழுங்காக புரிந்து கொண்டு, இனி வருங்காலங்களிலாவது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தாமல், தேவையில்லாமல் என் மீது பழி போடுவதை நிறுத்திக் கொண்டு, தனது கட்சிக்கு மத்திய அரசில் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி,
கச்சத் தீவை மீட்கவும், தமிழ்நாட்டில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறையை போக்கவும், முதல்வர் கருணாநிதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications