பெங்களூர் குண்டுவெடிப்பு: சிமி, லஷ்கர் இ தொய்பா, ஹூஜி மீது சந்தேகம்
பெங்களூர்: பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு சிமி, ஹூஜி அல்லது லஷ்கர் இ தொய்பா அமைப்புகள் காரணமாக இருக்கலாம் என மத்திய உளவுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூரை உலுக்கிய இன்றைய தொடசர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இந் நிலையில் இச்சம்பவங்களுக்கு பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அல்லது சிமி அமைப்பு ஆகியவை காரணமாக இருக்கலாம் என மத்திய உளவுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களாகவே பெங்களூரிலும், கர்நாடகத்தின் பிற பகுதிகளிலும் சிமி மற்றும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல வங்கதேசத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹூஜி எனப்படும் ஹர்கத் உல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த சிலரும் கைது செய்யப்பட்டனர்.
எனவே இதற்குப் பழி வாங்கும் வகையில் இன்றைய குண்டுவெடிப்பை இவர்களில் ஒருவர் நிகழ்த்தியிருக்கலாம் என உளவுப் பிரிவு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மத்திய அரசு கண்டனம்:
பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்பு தொடர்பாக உள்துறை செயலாளர் மதுகர் குப்தா கர்நாடக அரசுடன் தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்துள்ளார்.
அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிலைமையை உள்துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றார்.
உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அமைச்சரவை அவசர ஆலோசனை:
குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக விவாதிக்க அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தை முதல்வர் எடியூரப்பா கூட்டியுள்ளார். இன்று மாலை 5 மணிக்கு விதான செளதாவில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.