திருச்சி வாலிபர் உயிரைப் பறித்த செல்போன்
திருச்சி: செல்போனில் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டுவது எத்தனை ஆபத்தானது என்பதை உணர்த்தும் மற்றொரு விபத்து திருச்சி அருகே நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம் காவனூர் அருகே உள்ள ஜே.பி. நகரை சேர்ந்தவர் ராதா. இவரது மகன் ராஜா (வயது 21)
ராஜா, வேலாயுதம் என்பவருடன் மேல் பகுதி திறந்தபடி உள்ள ஒரு காரில் திருச்சி அருகே உள்ள பெல்லுக்கு கியாஸ் சிலிண்டர்கள் கொண்டு வந்தனர்.
பெல் நிறுவனம் செல்லும் வழியில் ஹெச்.ஆர்.பி.இ. போலீஸ் நிலையம் அருகில் பெரிய வாகனங்கள் செல்ல தடை விதித்து தடுப்பு கம்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த கம்பி அருகே நேற்றிரவு கார் சென்றது.
அப்போது ராஜாவின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. திறந்தவெளி காரான அதில் இருந்தபடியே பேச முடியாததால் ராஜா எழுந்து நின்று பேசி உள்ளார்.
அப்போது வாகனங்கள் செல்வதைத் தடுக்க வைத்திருந்த இரும்பு கம்பி மீது ராஜா தலை மோதியது. பலத்த காயம் அடைந்த ராஜாவை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து பெல் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.