திண்டுக்கல் மக்களை கதிகலங்க வைத்த தீ மனிதன்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு ரோட்டில் அமைதியாக நடந்து சென்ற ஒருவரை பொது மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ளது சித்தூர். இந்த பகுதியை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மகன் நசீருதீன் (26) கடந்த சில வருடங்களாக மன நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.
இதற்காக அவர் மதுரை அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அப்போது அவரது உடலில் தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இருப்பினும் அவர் எந்த வித சத்தம் இன்றி ரோட்டில் நடந்து சென்றார்.
இதைக் கண்டு திடுக்கிட்ட பொது மக்கள் அவரை காப்பாற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.