விலைபோவதற்கு நான் வைகோ அல்ல-செஞ்சியார்
சென்னை: மத்திய அமைச்சரவையில் நாங்கள் இடம் கேட்கவும் இல்லை. அவர்கள் தருவதாகவும் இல்லை என அதிருப்தி மதிமுக தலைவர் எல்.கணேசன் கூறினார்.
அவரது அணியில் உள்ள செஞ்சி ராமச்சந்திரனுடன் நிருபர்களிடம் பேசிய கணேசன்,
ஜனநாயக முற்போக்கு கூட்டணி தலைவர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோசித்த பின்னரே மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பது என முடிவெடுத்தோம்.
பின்னர் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் சோனியா காந்தியை சந்தித்து எங்கள் ஆதரவை தெரிவித்தோம்.
ஆனால் வைகோ நாங்கள் திமுகவைக் கூட கலந்து கொள்ளாமல் நேரடியாக காங்கிரசோடு தொடர்பு கொண்டு நாங்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதாக பொய் சொல்லியிருக்கிறார்.
அவரது நோக்கம் எங்களுக்கும் திமுகவுக்கும் சிண்டு முடிந்துவிடுவது தான். ஆனால், அவர் தப்புக் கணக்கு போட்டுள்ளார்.
எங்களை துரதிர்ஷ்டவசமாக, அவசர அவசரமாக உள்கட்சி பூசலால் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார் வைகோ.
மேலும் எங்களை நாடாளுமன்ற கட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆனால், சபாநாயகரை நாங்கள் நேரில் சந்தித்து நாடாளுமன்ற கட்சி உறுப்பினர்களால் தான் நாங்கள் தலைவர், துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம், எனவே எங்களை இந்த பதவிகளில் இருந்து நீக்க வைகோவுக்கு அதிகாரம் இல்லை என்று எடுத்துக் கூறினோம்.
அதை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஏற்றுக் கொண்டு நீங்கள் தொடரலாம் என்று கூறிவிட்டார். எனவே இப்போதும் நான் தான் நாடாளுமன்ற மதிமுக கட்சித் தலைவர்.
மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்கள் இருவரையும் ஓட்டு போட விடாமல் தடுக்க வேண்டும் என்று வைகோ சபாநாயகரிடம் சொன்னார். அதற்கு சபாநாயகர், நீங்கள் சட்டம் படித்தவர், விதிமுறைகளை அறிந்தவர். எம்.பிக்கள் வாக்களிப்பதை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அவர்கள் தவறாக வாக்களித்ததாக நீங்கள் கருதினால் வேண்டுமானால் பின்னர் நடவடிக்கை எடுக்கலாம் என்று வைகோவிடம் கூறிவிட்டார்.
நாடாளுமன்ற கட்சித் தலைவர் என்ற முறையில் நான் 19ம் தேதி எம்பி்க்கள் கூட்டத்தைக் கூட்டினேன். அதில் பொள்ளாச்சி கிருஷ்ணன், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் கலந்து கொள்ளவில்லை.
அந்தக் கூட்டத்தில் தான் நாங்கள் ஒருமனதாக அரசை ஆதரிப்பது என்று முடிவெடுத்து அதை 22ம் தேதி காலை 4 எம்.பிக்களுக்கும் தெரிவித்தோம்.
கட்சி கொறடா தன்னிச்சையாக ஒரு முடிவை எடுக்க முடியாது. எங்கள் முடிவுக்கு மாறாக வாக்களித்த 2 மதிமுக எம்.பிக்கள் மீதும் நாங்கள் சபாநாயகரிடம் புகார் செய்வோம்.
அவர்களது எம்.பி பதவியை பறிக்கக் கோருவோம். எங்கள் எம்.பி. பதவியை பறிக்கும் அதிகாரம் வைகோவுக்கு இல்லை. சபாநாயகர் தான் முடிவு செய்ய வேண்டும்.
யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை நாடாளுமன்றத்தில் இருக்கும் கட்சித் தலைவரான நான் எடுக்கலாமா அல்லது நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ள கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ எடுக்கலாமா என்பதையும் சபாநாயகர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் கணேசன்.
மத்திய மந்திரி சபையில் உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்று கேட்டதற்கு, நாங்கள் கேட்கவும் இல்லை. அவர்கள் தருவதாகவும் இல்லை என பதிலளித்தார் செஞ்சி ராமச்சந்திரன்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் உங்களது ஆதரவை கேட்டு யாராவது அணுகினார்களா என்று கேட்டதற்கு, விலைபோவதற்கு நான் வைகோ அல்ல என்றார் செஞ்சியார்.