அகமதாபாத்திலும் 16 இடங்களில் குண்டுவெடிப்பு - 18 பேர் பலி, 100 பேர் படு காயம்
பெங்களூரில் நேற்று முன்தினம் 9 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இன்றும் அங்கு வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் குஜராத்தின் அகமதாபாத் நகரில் இன்று அடுத்தடுத்து 16 இடங்களில் குண்டுகள் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஜவஹர் செளக், சக்லா, சரங்பூர், அம்ரல்வாடி, கோவிந்த்வாடி-கிஷான்பூர், ஹத்கேஸ்வர், மணி நகர், பாபு நகர், தக்கர் நகர், நரோடா, சர்கேஜ் உள்பட 16 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
சைக்கிள்கள்- டிபன் பாக்ஸ்களில்:
மாலை 6.45 மணியளவில் பாபு நகரில் முதல் குண்டு வெடித்தது.
வெடிகுண்டுள் அனைத்தும் சைக்கிள்கள் மற்றும் டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்புகள் நடந்த இடங்கள் பெரும்பாலானவை மார்க்கெட் பகுதிகள் ஆகும்.
இந்த குண்டுவெடிப்புகளில் 100 பேர் படுகாயமடைந்தனர். இந்த பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் மணி நகர் முதல்வர் நரேந்திர மோடியின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில் குண்டு வெடித்தது. சைக்கிளில் வெடிகுண்டுடன் வந்த நபர் பஸ் மீது மோதி, குண்டை வெடிக்கச் செய்ததாக தெரிகிறது.
இந்த குண்டுவெடிப்பில் பஸ் பாதி எரிந்து போய் விட்டது. அதேபோல பாபு நகரில், ரயில் நிலையத்திற்கு வெளியே குண்டு வெடித்தது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அகமதாபாத்தில் பெரும் பரபரப்பும், பீதியும் நிலவுகிறது. குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளை போலீஸார் முற்றுகையிட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரைப் போலவே அகமதபாத்திலும் குறைந்த சக்தி கொண்ட குண்டுகளே வைக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குண்டுகளைத் தேடி வேட்டை:
நகரில் மேலும் பல பகுதிகளில் குண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இதையடுத்து நகர் முழுவதும் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன் வெடிக்காத நிலையில் இருக்கும் குண்டுகளைத் தேடி வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
அதி விரைவு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு நகர் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதீபா பாட்டீல், மன்மோகன் சிங் கண்டனம்:
குஜராத் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்கள் அமைதி காக்க வேண்டும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மும்பை உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பும், பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாஜக மாநிலங்களில்:
நேற்று தொடர் குண்டுவெடிப்பு நடந்த கர்நாடகத்திலும், இன்று நடந்துள்ள குஜராத்திலும் பாஜக ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.