திருச்செந்தூரில் புலிகள் ஊடுருவல்?-க்யூ பிராஞ்ச் விசாரணை
திருச்செந்தூர்: விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ள ஒருவர் கோயிலுக்குள் விட்டுப்போன கேமரா பையால் திருச்செந்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவேளை நகருக்குள் புலிகள் ஊடுருவிட்டார்களோ என்ற சந்தேகத்தில் க்யூ பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
திருச்செந்தூரில் தூண்டி விநாயகர் கோவில் உள்ளது. கோயிலுக்குள் கேமரா பேக் ஒன்று அனாதையாக கிடந்தது. இதை எடுத்த கூலித் தொழிலாளி அய்யாதுரை, கோயில் அலுவலகத்தில் ஓப்படைத்தார். உடனே பயந்துபோன நிர்வாகிகள் போலீசில் ஓப்படைக்குமாறு கூறி விட்டனர்.
போலீசுக்கு போக பயந்த அந்த தொழிலாளி அவர் எடுத்த இடத்திலேயே பேக்கை வைத்து விட்டார். இதுகுறித்து திருச்செந்தூர் விஏஓ பாலசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது. அதற்குள் கோயில் பகுதியில் பரபரப்பாகிவிட்டது.
அவர் பேக்கை எடுத்து திருச்செந்தூர் போலீசில் ஓப்படைத்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் பேக்கை சோதனை போட்டனர்.
அதில் பயன்படுத்தப்படாத 4 வீடியோ கேசட், பயன்படுத்தப்பட்ட ஒரு கேசட், படம் எடுக்கப்பட்ட 2 பிலிம் ரோல், கேமராவின் வெளிப்பையில் ரூ.25 ஆயிரம் இருந்தன. இது தவிர இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வுக்காக வசூலிக்கும் நன்கொடை ரசீது புத்தகமும் இருந்தன.
புலிகளுக்காக நிதி வசூல்?:
அந்த ரசீதில் நலிவுற்றோர் நலன் வாழ்வுத்திட்டம் என்ற தலைப்பில் இலங்கையில் போரினால் நேரிடையாக பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வை வளமாக்க தங்களின் மனம் உவந்த பங்களிப்பை நல்குங்கள். முகவரி-சமுதாய முன்னேற்ற நிலையம், நலிவுற்றோர் நலவாழ்வு திட்டம், தலைமை செயலகம், கனகபுரம், கிளிநொச்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தகவல் கிடைத்ததும் கியூ பிராஞ்ச் போலீசார் திருச்செந்தூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிதி வசூலிக்க திருச்செந்தூர் வந்த விடுதலைபுலிகளோ அல்லது அவர்களின் ஆதரவாளர்களோ இந்த கேமரா பேக்கை தவற விட்டுச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பேக்கை கொண்டு வந்தது விடுதலை புலிகளா அல்லது அந்த இயக்கத்தை ஆதரிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications