அணு ஒப்பந்தம்: ரஷ்ய அதிபருடன் பிரதமர் பேச்சு
மாஸ்கோ: அணு சக்தி ஒப்பந்தம் குறித்து ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வதேவுடன் பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார். என்.எஸ்.ஜி. அமைப்பில் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று அப்போது அவர் டிமிட்ரியை கேட்டுக் கொண்டார்.
இந்திய அணு சக்தி ஒப்பந்தம் வேகம் பிடித்துள்ளது. ஐஏஇஏவில் வரைவு ஒப்பந்தத்திற்கு ஆகஸ்ட் 1ம் தேதி ஒப்புதல் கிடைக்கவுள்ளது. இதையடுத்து என்.எஸ்.ஜி. எனப்படும் அணு பொருள் சப்ளை குழுவின் ஒப்புதலை இந்தியா பெற வேண்டியுள்ளது.
இதற்காக பல்வேறு அமைச்சர்களை பல நாடுகளுக்கும் அனுப்பி இந்திய தீவிர ஆதரவு வேட்டையில் இறங்கியுள்ளது. வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ்.மேனனும் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவை பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த தொலைபேசி பேச்சின்போது என்.எஸ்.ஜியில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து இரு தலைவர்களும் முக்கியமாக ஆலோசித்தனர். இதுதவிர இரு தரப்புஉறவுகள் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.
ரஷ்ய அதிபர் மெத்வதேவின் இந்திய வருகை குறித்தும் இந்த பேச்சின்போது விவாதிக்கப்பட்டதாக கிரெம்ளின் தகவல் தெரிவிக்கிறது.
45 உறுப்பினர்களைக் கொண்ட என்.எஸ்.ஜி. அமைப்பில் ரஷ்யாவும் ஒரு முக்கிய உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஜப்பானில் நடந்த ஜி8 மாநாட்டின்போது மெத்வதேவை மன்மோகன் சிங் சந்தித்தபோதும் அணு சக்தி ஒப்பந்தம் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர் என்பது நினைவிருக்கலாம். அப்போதே, இந்தியாவுக்கு ரஷ்யாவின் முழு ஆதரவும் உண்டுஎன்று மெத்வதேவ் உறுதியளித்திருந்தார்.
ரஷ்யாவின் உதவியுடன் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட இரு அணு உலைகளை இந்தியா கட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர மேலும் நான்கு உலைகளையும் ரஷ்யா கட்டித் தரவுள்ளது. இதுதொடர்பாகவும் நேற்றைய பேச்சின்போது இரு தலைவர்களும் விவாதித்தனர்.