பள்ளிகளில் தமிழுக்கு முக்கியத்துவம்: கனிமொழி
சென்னை: பள்ளிகளில் தாய்மொழி தமிழுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மற்றும் மழலையர் தொடக்க பள்ளி சங்கங்களின் 35-வது மாநில மாநாடு சென்னையில் நேற்று நடந்தது.
இதில் கலந்து கொண்ட திமுக எம்பி கனிமொழி பேசியதாவது: ஆசிரியர்களின் ஒவ்வொரு வார்த்தையும் குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய இடத்தை வகிக்கிறது. முன்பெல்லாம் ஆசிரியர்களின் பேச்சுக்கு மாணவர்களிடையே மறுப்பு இருக்காது.
இப்போது, எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இன்றைய தலைமுறையினரிடம் அதிகரித்துள்ளது.
எனவே ஆசிரியர்கள் உலகின் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றங்களை உள்வாங்கி கொள்ள வேண்டும். மாணவர்களின் மன நிலையை அறிந்து அவர்களை அணுகும் முறையையும் அறிந்து கொள்ள வேண்டும்.
கல்வி வளர்ச்சியில் மெட்ரிக் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் முந்தி செல்கின்றன. சில மெட்ரிக் பள்ளிகள் நன்கொடையும், குழந்தைகளின் பெற்றோர்கள் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள். தவிர பள்ளிகளில் குழந்தைகள் தமிழில் பேச தடை போடுவதாகவும் கூறப்படுகிறது. இது மிகவும் வேதனையான விஷயம்.
மொழிகளை கற்றுக் கொள்வதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஆனால் தாய்மொழி வழியில் கற்றுக் கொடுத்தால் குழந்தைகள் எளிதில் புரிந்துக்கொள்ள முடியும் எனவே தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் தாருங்கள் என்று பேசினார் கனிமொழி.