பாஜக ஆளும் மாநிலங்களுக்கு தீவிரவாதிகள் குறி?
பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கும், அகமதாபாத் குண்டு வெடிப்புக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
இரு குண்டுவெடிப்புகளிலும் நாட்டு வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த குண்டுகள் அம்மோனியம் நைட்ரேட்டால் செய்யப்பட்டுள்ளன. இரு குண்டுகளிலும் குவார்ட்ஸ் டைமர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த குண்டுகளால் பலத்த சேதம் ஏற்பட வேண்டும் என்பதற்காக ஆணிகள், போல்டுகளையும் குண்டுகளுடன் தீவிரவாதிகள் இணைத்துள்ளனர். குவார்ட்ஸ் டைமர்கள் கொண்ட மைக்ரோ சிப்களையும் பயன்படுத்தி நேரத்தை செட் செய்துள்ளது.
இதனால் இரு நகரங்களிலும் ஒரே குழுவினரே தாக்குதலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என போலீஸார் நம்புகின்றனர்.
பெங்களூர் தாக்குதலை விட குஜராத் தாக்குதலில் அதிக உயிரிழப்பு நேரிட்டிருப்பதால் உண்மையில் தீவிரவாதிகளின் குறி அகமதாபாத்தாகத்தான் இருக்க வேண்டும் என மத்திய உளவுப் பிரிவு கருதுகிறது.
பெங்களூரில் குண்டுவெடிப்புகளை மிரட்டலுக்காகவே நடத்தியுள்ளனர் என பாதுகாப்புத் துறை கருதுகிறது.
அடுத்தடுத்து பாஜக ஆளும் மாநிலங்களில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளதால் அந்தக் கட்சி ஆளும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேச அரசுகளை முழு எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஐ.பி. அறிவுறுத்தியுள்ளது.
ம.பியில் இரவுக் காட்சிகளுக்கு தடை:
இந் நிலையில் மத்தியப் பிரதேசத்தில் குவாலியர், போபால் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகர்களிலும் இரவு திரைப்படக் காட்சிகளுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.