அகமதாபாத் குண்டுவெடிப்புக்கு இந்தியன் முஜாஹிதீன் பொறுப்பேற்பு
டெல்லி: அகமதபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு தாங்களே பொறுப்பு. இன்னும் இது போல சம்பவங்களை எதிர்பார்த்திருங்கள் என்று கூறி இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக குண்டு வெடிப்புக்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக அது ஒரு இமெயிலை அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிக்கை அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ளது.
அந்த இமெயில், ஜிஹாத்தின் உதயம், குஜராத்துக்கு பழிக்குப் பழி என்று தலைப்பிடப்பட்டிருந்தது. குஜராத் கலவர படமும் அதில் இடம் பெற்றுள்ளது.
அந்த இ மெயிலில் கூறப்பட்டுள்ளதாவது...
இன்னும் 5 நிமிடங்கள் காத்திருங்கள். மரணத்தின் பயத்தை உணர காத்திருங்கள்.
ஜெய்ப்பூர் வெற்றிக்குப் பிறகு மீண்டும் வெற்றிகரமாக திரும்பி வருகிறோம். முஜாஹிதீன்களையும், இஸ்லாமின் பிதாயின்களையும் சந்திக்க காத்திருங்கள். முடிந்தால் தடுத்துப் பாருங்கள். ஜிஹாத்தின் பயங்கரத்தை உங்களுக்கு உணரவிருக்க வருகிறோம்.
இஸ்லாமியர்களை அவலப்படுத்திய மோடியின் இடத்திற்கே வருகிறோம்.
மத்திய பிரதேசம், ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் ஜிஹாத்தின் பயங்கரத்தை விரைவில் உணருவீர்கள்.
ஹைதராபாத் போலீஸார் கைது செய்து வைத்துள்ள இஸ்லாமிய ஜிஹாதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் விளைவுகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.
எங்களது கொலைப் பட்டியலில் மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், துணை முதல்வர் ஆர்.ஆர். பாட்டீல், முகேஷ் அம்பானி ஆகியோரும் உள்ளனர்.
நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோரையும் தாக்குவோம்.
மேலும் ஒருதலைப்பட்சமாக செய்திகள் வெளியிடுவதை டைம்ஸ் ஆப் இந்தியா, டைம்ஸ் நெள தொலைக்காட்சி ஆகியவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள் அப்பாவிகளான சிமி தொண்டர்களை விடுவிக்க வேண்டும் என்று அந்த இ மெயிலில் கூறப்பட்டிருந்தது.
மெயிலின் கீழே குரு அல் ஹிந்தி, அல் அர்பி என கையெழுத்திடப்பட்டுள்ளது.
முஸ்லீம் நடிகர்களுக்கு எச்சரிக்கை:
இதற்கிடையே இந்திப் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்ளுமாறு முஸ்லீம் நடிகர், நடிகர்களுக்கு மிரட்டல் விடுத்தும் சில பத்திரிக்கைகளுக்கு ஒரு மெயில் அனுப்பப்பட்டுள்ளது. இதை அனுப்பியதும் இதே அமைப்பினர் தானா என்ற விசாரணை நடக்கிறது.