For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி, அத்வானி, சோனியா கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

அகமதாபாத்: அகமதாபாத்தில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விடுத்துள்ள, அறிக்கையில்,

பெங்களூருவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவமும், அகமதாபாத்தில் நடைபெற்றுள்ள குண்டு வெடிப்பு சம்பவமும் ஒரே மாதிரியாக இருப்பதால் இந்த குண்டு வெடிப்புகளை ஒரே அமைப்பு அல்லது ஒரே நாடு நடத்தியிருக்க வேண்டும்.

குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கடுமையான தண்டனை விதிக்கப்படுவார்கள்.

மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு, அனைத்து செலவுகளையும் அரசு ஏற்றுக்கொள்ளும். இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி அளிக்கப்படும்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மனித நேயத்துக்கு எதிரானது. நாம் அனைவரும் தீவிரவாதத்துக்கு எதிராக போராட நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

அத்வானி கண்டனம்:

பாஜக தலைவர் அத்வானி கூறுகையில், அகமதாபாத்தில் நடத்தப்பட்டுள்ள தொடர் குண்டு வெடிப்பு தாக்கதலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெங்களூரைத் தொடர்ந்து அகமதாபாத்தில் இந்த தாக்குதல் தொடர்ந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல் என்பதை இந்த தாக்குதல்கள் காட்டுகின்றன. பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனவா என்று பார்க்க வேண்டியது மிகுவும் அவசியம்.

இதுகுறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் பேசினேன். தீவிரவாதத்துக்கு எதிரான கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து அவரிடம் தெரிவித்தேன். தற்போதைய தாக்குதல் குறித்த தீவிர விசாரணை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டேன்.

குஜராத் சட்டசபையில் தீவிரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு (MCOCA) ஒப்புதல் கேட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் அதற்கான ஒப்புதல் இதுவரை கிடைக்கவில்லை. சட்ட ஒப்புதல் அளிக்க சிபாரிசு செய்யும்படி அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தீவிரவாதத்துக்கு எதிராக போடா போன்ற கடுமையான சட்டங்கள் தேவை என்றார்.

இந்நிலையில் அகமதாபாத்துக்கு அத்வானி சென்றார். தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சோனியா கண்டனம்-இரங்கல்:

அகமதாபாத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது கோழைத்தனமானது. இந்த வெறித்தனமான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் அமைதியையும் ஒருமைப்பாட்டையும் குலைக்கும் செயலாக இது உள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மேலும், மக்கள் அமைதி காக்க வேண்டு்ம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் ஹரிபிரசாத் தலைமையில், ராஜீவ் சுக்லா, அபிஷேக் சிங்வி உள்ளிட்ட பிரதிநிதிகள் அகமதாபாத்துக்கு இன்று செல்கின்றனர். தாக்குதல் நடந்த பகுதிகளை அவர்கள் நேரில் பார்வையிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொடா போனதே காரணம்: வெங்கையா

பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், பொடா சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்டதன் மூலம், பயங்கரவாதிகளுக்கு அடிபணிந்துவிட்டது. இதனால், பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருகின்றன.

பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்தும் அளவிற்கு மாநில அரசுகளிடம் எந்தவிதமான வசதிகளும் இல்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசுதான், தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும்.

பிரதமர் அகமதாபாத் பயணம்:

இந்நிலையில் தாக்குதல் நடந்த அகமதாபாத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் நாளை செல்கிறார். சம்பவம் நடந்த இடங்களை பார்வையிட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் அகமதாபாத்தில் பதட்டம் நிறைந்த பகுதிகளில் ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X