மும்பையிலிருந்து வந்தது மிரட்டல் மெயில்-கம்ப்யூட்டர் 'ஹேக்' செய்யப்பட்டதா?!
மும்பை: பெங்களூர், அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள இ-மெயில் மும்பையிலிருந்து வந்தது தெரியவந்துள்ளது.
ஆனால், அந்த வீட்டிலிருந்த கம்ப்யூட்டர் ஹேக் செய்யப்பட்டு அதன் ஐ.பி அட்ரஸை பயன்படுத்தி வேறிடத்திலிருந்து இந்த மெயில் அனுப்பப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
முன்னதாக இந்த மிரட்டல் மெயில் குறித்து மத்திய உளவுப் பிரிவினர் நடத்திய விசாரணையில் இது நவி மும்பையிலிருந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மெயில் அனுப்பப்பட்ட இடத்தை போலீஸார் கண்டுபிடித்தனர்.
நவி மும்பையின் சன்பாரா பகுதியில் உள்ள பாம்பீச் என்ற இடத்தில் உள்ள குனினா என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் தான் மெயில் அனுப்பப்பட்ட வீடு உள்ளது.
அபிஷேக் சர்மா என்பவருக்கு சொந்தமான அந்த வீட்டில் அமெரிக்கர் ஒருவர் குடியிருந்தார். அந்த வீட்டை முற்றுகையிட்டு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் யாரும் இல்லை.
இதையடுத்து வீட்டின் கம்ப்யூட்டரில் இருந்த ஹார்ட் டிஸ்க் கைப்பற்றப்பட்டது. வீட்டுக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.
குண்டுவெடிப்புக்கு 10 நிமிடங்களுக்கு முன் இந்த மெயில் அனுப்பப்பட்டுள்ளது.
'ஐபி அட்ரஸ்' ஹேக் செய்யப்பட்டதா?:
இதற்கிடையே அந்த வீட்டில் குடியிருந்த அமெரிக்கர் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும், அவரது கம்ப்யூட்டர் சில தினங்களுக்கு முன் 'ஹேக்' செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனது கம்ப்யூட்டரும் ஐபி அட்ரசும் 'ஹேக்' செய்யப்பட்டதாக அந்த அமெரிக்கர் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் இந்த மெயி்ல் இந்த வீட்டிலிருந்து அனுப்பப்படவில்லை, இந்த கம்ப்யூட்டரின் ஐபி அட்ரஸை பயன்படுத்தி வேறிடத்திலிருந்து , புராக்ஸி சர்வர்-கம்ப்யூட்டரிலிருந்து, இந்த மெயில் அனுப்பப்பட்டதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications