குண்டுவெடிப்பு-முஸ்லீம் அமைப்புகள் கண்டனம்
பெங்களூர்: பெங்களூரில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவை வலியுறுத்தியுள்ளன.
நேற்று முன் தினம் பெங்களூரில் 9 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக பலியாயினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கண்டத்தை தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில், இது மிகவும் கோழைத்தனமான தாக்குதல். அமைதியையும் மத ஒற்றுமையையும் குலைக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு முறை நடக்கும் தாக்குதலின்போதும், சிமி அல்லது வேறு ஏதாவது ஒரு அமைப்பின் பெயர் கூறப்படுகிறது. இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடும் அமைப்புகளை உரிய விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.
பீகார், ஒரிஸா மற்றும் ஜார்கண்ட்டில் உள்ள இமாரத் ஷரியாஹ் அமைப்பின் பொது செயலாளர் அனிசுர் ரகுமான் காஸ்மி கூறுகையில், குண்டுவெடிப்பு தாக்குதல்கள் புலனாய்வுத் துறையின் அஜாக்கிரதையாலும் சோம்பேறித் தனத்தினாலும் நடக்கின்றன.
கட்கோபர், ஹைதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் மகாராஷ்டிராவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பதன் விசாரணை இதுவரை முடிவுக்கு வரவில்லை.
ஜெய்ப்பூர் வெடிகுண்டு விசாரணை என்ன ஆயிற்று, யார் தாக்குதலை நடத்தியது என்பது இதுவரை தெரியவில்லை. தாக்குதல் நடந்து 6 மாதம் கழித்து வழக்கின் விசாரணை குழிதோண்டி புதைக்கப்பட்டு விடுகிறது. இதுபோன்ற தாக்குதல்கள் குறித்து எதையும் சாராத தனியார் புலனாய்வு அமைப்புகளிடம் மத்திய அரசு விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என்றார்.
கர்நாடக முஸ்லிம் முத்தாஹிதா மஹஸ் அமைப்பின் தலைவர் முக்தார் அகமது கூறுகையில், நடந்த தாக்குதல்களை பார்க்கும்போது மதம் காரணமாக நடத்தப்பட்டதல்ல. உரிய விசாரணை நடத்தி தாக்குதல் நடத்தியது யார் என்பதை அறிய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications