குண்டுவெடிப்பு: பாக், அமெரிக்கா கண்டனம்
டெல்லி: அகமதாபாத் மற்றும் பெங்களூர் நகரங்களில் நடந்துள்ள தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பெங்களூரில் நேற்று முன் தினம் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் பெண் ஒருவர் பலியானார். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நேற்று மாலை குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் 16 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 45 பேர் பலியாயினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெங்களூர் மற்றும் அகமதாபாத்தில் நடந்துள்ள தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் இறந்த அப்பாவி மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி, அகமதாபாத் மற்றும் பெங்களூர் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவின் 2 முக்கிய நகரங்களில் நடந்துள்ள வெடிகுண்டு தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இது அப்பாவி மக்கள் மீதான கொடூர தாக்குதல் என்று கூறியுள்ளார்.
கிலானி தற்போது அமெரிக்காவுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.