அரசைக் காக்க ரூ. 600 கோடி செலவு: பாஜக
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் காப்பதற்காக தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் ரூ. 600 கோடி வரை செலவிட்டுள்ளனர். இதற்குப் பிரதியுபகாரமாக அரசுக்கு நெருக்குதல் கொடுத்து தங்களது காரியங்களை சாதித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கவிழாமல் காப்பதற்காக பல்வேறு தரப்பினரும் ரூ. 600 கோடி வரை செலவிட்டுள்ளனர். இந்தப் பணத்திற்குப் பதிலாக தங்களுக்கு சாதகமாக காரியங்களை முடித்துக் கொடுக்குமாறு அரசை தற்போது நிர்ப்பந்தித்து வருகின்றனர்.
இவற்றில் சட்டத்திற்கு உட்பட்ட காரியங்கள் தவிர சட்டத்திற்குப் புறம்பான காரியங்களும் அடக்கமாகும்.
கருப்பு பண முதலைகளுக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் இடையிலான உறவு இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆளுங்கூட்டணியின் இந்த தவறான போக்குக்கு நாடு பலியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
3 பாஜக எம்.பிக்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது தொடர்பான விசாரணைய சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி விரைவில் தொடங்க வேண்டும்.
எம்.பிக்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரம் நடந்திருப்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது என்றார் நக்வி.