மத்திய அரசின் போக்கே தீவிரவாதம் பெருக காரணம் பாஜக
டெல்லி: மத்திய அரசு தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மிகவும் மென்மையாக நடந்து கொள்வதன் காரணமாகவே தீவிரவாத தாக்குதல்கள் பெருகி விட்டன என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
அகமதாபாத் குண்டுவெடிப்பு குறித்து பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு தீவிரவாதிகளை ஒழிப்பதில் அக்கறை காட்டவில்லை. மென்மையான அணுகுமுறையைக் கையாளுகிறது. இதன் காரணமாக தீவிரவாதிகள் முன்பை விட வலுவானவர்களாக மாறியுள்ளனர். அப்பாவிகளின் உயிர்களோடு விளையாடி வருகிறார்கள்.
கடந்த நான்கு ஆண்டுகளில் 5000க்கும் மேற்பட்ட தீவிரவாத குழுக்கள் நாட்டின் பல பகுதிகளிலும் ஊடுறுவியுள்ளன. இவற்றை ஒழிக்க அரசு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. காரணம், வாக்கு வங்கி போய் விடும் என்ற பயம்.
பொடா சட்டத்தை நீக்க அவசரம் காட்டிய மத்திய அரசு, அதற்கு மாற்றான சட்டத்தைக் கொண்டு வரத் தவறி விட்டது. இதன் காரணமாக தீவிரவாதிகளை ஒடுக்க கடுமையான சட்டம் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. மேலும், பிற மாநிலங்களிலும், தீவிரவாதத்திற்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு அனுமதிக்கவில்லை.
தீவிரவாதம் எந்த வித தயக்கமும், சந்தேகமும் இல்லாமல் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை. ஆனால் அடுத்தடுத்து நடந்து வரும் வெடிகுண்டுச் சம்பவங்களைப் பார்த்தால் மத்திய அரசு இதில் தவறி விட்டதாகவே நினைக்கத் தோன்றுகிறது.
சாதாரண மக்களின் உயிருடன் விளையாடும் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். இரும்புக் கரம் கொண்டு தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சிவராஜ் பாட்டீல் கண்டனம்:
மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், அகமதாபாத் சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாட்டின் அமைதியை சீர்குலைத்து மக்களிடையே பீதியை ஏற்படுத்த சமூக விரோதிகள் முயலுகின்றனர்.
அகமதாபாத்தில் நடந்துள்ள குண்டுவெடிப்பும் இதே நோக்கத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான். இந்த குண்டுவெடிப்பு கடும் கண்டனத்துக்குரியது. மக்கள் அமைதியாக இருந்து ஒத்துழைக்க வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
குஜராத் அரசுடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
அமைதி காக்க மோடி கோரிக்கை
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறுகையில், குஜராத் மக்கள் அமைதி காத்து, விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
மோடியின் தொகுதியான மணி நகரில் நேற்று 3 குண்டுகள் வெடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.