ஆணுறைகளில் ஆபாச படம்- நீதிமன்றம் தடை!
மதுரை: ஆணுறைகளில் பாலுணர்வைத் தூண்டும் வகையிலான படங்களை பயன்படுத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்து உள்ள மனுவில், ஆணுறை விற்பனைக்காக ஆபாச விளம்பரங்கள் செய்யப்படுகிறது. அந்த ஆணுறை பாக்கெட்டுகள் மீது ஆபாச படங்கள் இடம் பெறுகிறது. எனவே ஆணுறைகள் மீது ஆபாச படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.கே. கங்குலி மற்றும் ஜோதிமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்திய நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியத்தை பாதுகாக்கும் கடமை ஒவ்வொரு இந்திய குடி மகனுக்கும் உண்டு.
நியாயமான சட்டத்திற்கு உட்பட்டே அனைவரும் வியாபாரம் செய்ய வேண்டும்.
இந்த விஷயத்தில் நல்லொழுக்கம், மற்றும் நன்னடத்தைக்கான அளவு கோலை நீதி மன்றம் நிர்ணயம் செய்வது கடினம்.
எனவே ஆணுறை பாக்கெட்டுகளில் ஆபாச படங்களை அச்சிட்டு விற்பனை செய்வதும், பத்திரிக்கை, டிவி விளம்பரங்களில் ஆபாச படங்களை வெளியிட தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.