தமிழகம் முழுவதும் உஷார் நிலை-மேட்டூர் அணைக்கு பாதுகாப்பு
சென்னை: பெங்களூர், அகமதபாத் ஆகிய நகரங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
பெங்களூரைத் தொடர்ந்து அகமதாபாத் நகர் நேற்று தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளானது. அடுத்தடுத்து இரு பெருநகரங்களில் நடந்து விட்ட இந்த தொடர் குண்டுவெடிப்புகளால் மத்திய அரசு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. நாடும் பதட்டத்தில் ஆழ்ந்துள்ளது.
இதையடுத்து டெல்லி, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட அனைத்து பெருநகரங்களிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர் வளாகங்கள், சந்தைகள், கோவில்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் என அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தமிழகத்திலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் திரிபாதி தலைமையில் காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் சென்னை நகரில் 24 மணி நேரமும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டது.
இதுதவிர மாநிலம் முழுவதும் உள்ள அணைகள், மின் நிலையங்கள், அணு உலைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கவும், முக்கிய பகுதிகளில் 24 மணி நேர பாதுகாப்பு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
வழிபாட்டுத் தலங்கள் குறிப்பாக கோவில்கள் உள்ளிட்ட இடங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரைகள், கேளிக்கை பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள், தூதரகங்கள், அரசு அலுவலகங்கள், ஐடி நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பழைய குற்றவாளிகள், சந்தேகப் பேர்வழிகளை வளைத்துப் பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை தவிர நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் அனைத்துக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்குப் பாதுகாப்பு:
அதேபோல மேட்டூர் அணைக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அணையின் முக்கிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். தீவிர ரோந்துப் பணியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் விமான நிலையத்திற்கும் தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சேலம் நகரிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications