அதிமுக எம்எல்ஏ 'அர்ச்சனை'-பெண் எஸ்ஐ அழுகை
கோவை: கோவையில் பெண் எஸ்ஐ ஒருவரை அதிமுக எம்எல்ஏ திட்டிப் பேசியதால் அந்த எஸ்.ஐ. கதறி அழுதார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் நகராட்சி திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் மக்கள் குறை கேட்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் முகாம் துவங்கப்படாதாதல் மக்கள் மனு கொடுக்க முன்டியடித்து நின்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் முகாம் தள்ளி வைக்கப்படுவதாக மாவட்ட அதிமுக தரப்பில் திடீரென அறிவிக்கப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் அதிமுகவினரை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தினர்.
ஆர்பாட்டம் நடத்திய மக்களை எம்எல்ஏக்கள் வேலுசாமி, சின்னசாமி ஆகியோர் சமாதானம் செய்து கொண்டிருந்தனர்.
இது தெரியாமல் அங்கு வந்த பெண் எஸ்ஐ மஞ்சு வரலட்சுமி பொது மக்களிடம் விசாரணை நடத்தினார். இதனால் கோபமடைந்த எம்.எல்.ஏ. வேலுச்சாமி, யாரும் எதிர்பாராத வகையில், கடும் சொற்களால் மஞ்சு வரலட்சுமியைத் திட்டத்தொடங்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுவரலட்சுமி கதறி அழுதார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மஞ்சுவுடன் வந்த சக போலீஸார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.